காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜா (27) மற்றும் கணபதியை சேர்ந்த ஸ்ரீ ஜெயராம் (24) என இருவரை காட்டூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் இருவரை காட்டூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் முகசிப்புதூரைச் சேர்ந்த பிரசாந்த் (27), கோவை நஞ்சப்பா ரோட்டில் உள்ள தனது மாமாவுக்குச் சொந்தமான எச்.பி. பெட்ரோல் பங்க்கில் கடந்த ஆறு மாதங்களாக ஊழியராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, பிரசாந்த் மற்றும் தனுஷ் ஆகியோர் பணியில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள், பிளாஸ்டிக் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்புமாறு கேட்டுள்ளனர்.

ஆனால், பாதுகாப்பு விதிமுறைகளின்படி பிளாஸ்டிக் தண்ணீர் கேனில் பெட்ரோல் வழங்க முடியாது என பிரசாந்த் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பிரசாந்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தலையில் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த பிரசாந்த், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், தாக்குதலுக்கு முன்பு தாங்கள் அமைச்சர் சம்பத் குமாரின் உறவினர்கள் எனக் கூறிக்கொண்டு அந்த வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜா (27) மற்றும் கணபதி பாலாஜி லே-அவுட்டைச் சேர்ந்த ஸ்ரீ ஜெயராம் (24) ஆகியோர் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 296(b), 115 (2), 351 (3) பிஎன்ஸ் ஆகிய பிரிவுகளின் கீழ் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் சம்பத் குமார், தாக்குதல் நடத்தியவர்களுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்தார். மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Newsletter

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...