பாசனத்துக்காக 5-இல் பவானிசாகர் அணை திறப்பு

பாசனத்துக்காக பவானிசாகர் அணையில் இருந்து வரும் வியாழக்கிழமை (அக்.5) முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இந்தக் கோரிக்கையை ஏற்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், ஈரோடு, பவானி வட்டங்களில் உள்ள அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காலிங்கராயன், கீழ்பவானி திட்ட வாய்க்கால்களின் வழியாக முதல்போக பாசனத்துக்காக பவானிசாகர் அணையில் இருந்து வரும் வியாழக்கிழமை (அக்.5) முதல் நீர் திறந்து விடப்படும். இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 747 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

பாபநாசம்-மணிமுத்தாறு: இதே போன்று, பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து வரும் வியாழக்கிழமை (அக்.5) முதல் நீர் திறந்து விடப்படும்.

இதனால், தாமிரவருணி பாசன அமைப்பிலுள்ள வடக்கு-தெற்கு கோடை மேலழகியான் கால்வாய்கள், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங் கால்வாய், திருநெல்வேலி கால்வாய், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதான கால்வாய், வடக்கு பிரதானக் கால்வாய் ஆகிய கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படும். இதனால், 86 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

Newsletter