வறட்சி: தாராபுரத்தில் மக்காச்சோள சாகுபடி பாதிப்பு

தாராபுரம் அருகே தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக மக்காச்சோளப் பயிர் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தாராபுரம் பழைய அமராவதி பாசனமான அலங்கியம், சீத்தக்காடு, திருமலைபாளையம், மணக்கடவு, பொம்மநல்லூர், தேர்பட்டி, வெள்ளகவுண்டன்வலசு, கொங்கூர் பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. 120 நாள் பயிரான மக்காச்சோளம் நன்கு வளர்ந்து பயிர் பிடிக்கும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக காய்ந்து விட்டது. இதனால், இப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அலங்கியம் விவசாயி பழனிசாமி கூறியதாவது:

அலங்கியத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்திருந்த மக்காச்சோளம் தண்ணிர் பற்றாக்குறையால் காய்ந்துவிட்டது. ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இடுபொருள் செலவு செய்த விவசாயிகள் மிகுந்த கவலைக்குள்ளாகி உள்ளனர்.

அமராவதி பாசனப் பகுதியில் 140 வருடங்களுக்குப் பிறகு கடும் வறட்சி நிலவுகிறது. காய்ந்து போன பயிர்களைக் கணக்கெடுத்து அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

Newsletter