தம்மம்பட்டியில் தேங்காய் பருப்பு விலை சரிவு: விவசாயிகள் ஏமாற்றம்

தம்மம்பட்டி பகுதியில் கடந்த ஒரு வாரமாக தேங்காய் பருப்புகளின் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளான செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், கொப்பம்பட்டி, முருங்கப்பட்டி, கூடமலை, கொண்டயம்பள்ளி, தகரப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் உள்ளன. இந்த தென்னை மரங்கள் பெரும்பாலும் தண்ணீர் இல்லாததால், காய்ந்து வருகின்றன. இந்த நிலையில் காய்ந்துவரும் தென்னை மரங்களிலும், தண்ணீர் விடப்படும் மரங்களிலும் குறைந்த அளவே தேங்காய்கள் கிடைக்கின்றன.

விவசாயிகள் தேங்காய் மட்டைகளை உரித்து, அதன் உள்ளே இருக்கும் பருப்புகளை காயவைத்து, தம்மம்பட்டியிலுள்ள விற்றுவருகின்றனர்.கடந்த வாரம் ரூ.65-க்கு ஒரு கிலோ தேங்காய்ப் பருப்புகள் விற்றன. தற்போது, அதன் விலை ரூ.58 ஆக குறைந்துள்ளது. இதுகுறித்து தேங்காய் பருப்புகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கூறியதாவது:

தம்மம்பட்டியில் கொள்முதல் செய்யப்படும் தேங்காய் பருப்புகள், ராசிபுரம், திருச்செங்கோட்டுக்கு கொண்டு செல்கிறோம். அங்கு எடுத்துக் கொள்ளப்படும் விலையை வைத்தே, தேங்காய் பருப்புகளை கொள்முதல் செய்கிறோம் என்றனர்.

Newsletter