ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வேண்டும்: மத்தியக் குழுவினரிடம் கடலூர் விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்தியக் குழுவினரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கடலூர் மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய வேளாண் அமைச்சக தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் வசுதா மிஸ்ரா தலைமையில், மத்திய நிதி ஆணையப் பிரிவு ஆலோசகர் தீனாநாத், மத்திய எரிசக்தி அமைச்சக துணை இயக்குநர் சுமீத்குமார் ஆகியோர் அடங்கிய மத்தியக் குழு, தமிழக அரசு வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால், கடலூர் மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் ஆகியோருடன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

காவிரி டெல்டா கடை மடைப் பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் உள்ள கொடியாளம், பரிவிளாகம் கிராமத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விவசாயிகள் கருகிய பயிர்களைக் காண்பித்து பாதிப்பு குறித்து, மத்தியக் குழுவினரிடம் தெரிவித்தனர்.

விவசாயச் சங்க பிரதிநிதிகள் ஏ.பி.ரவீந்திரன், கே.வி.இளங்கீரன், பி.விநாயகமூர்த்தி, ரங்கநாயகி, பி.மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்து, உடனடியாக நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யுமாறு வலியுறுத்தினர்.

கொடியாளத்தில் மத்தியக் குழு தலைவர் வசுதா மிஸ்ராவிடம் கான்சாகிப் வாய்க்கால் பாசன சங்கத் தலைவர் சையத்சகாப் வறட்சி பாதிப்பு குறித்து ஹிந்தியில் பேசினார். மேலும், விவசாயிகளின் கருத்துகளையும் அவர் ஹிந்தியில் எடுத்துரைத்தார்.

ரூ. 25 ஆயிரம் வேண்டும்: கடலூர் மாவட்டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல், உளுந்து, கரும்பு, மக்காசோளம், பருத்தி, மஞ்சள் ஆகிய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரமும், மானாவாரி பயிர்களுக்கு ரூ. 15 ஆயிரமும், தரிசாக உள்ள நிலங்களுக்கு ரூ. 10 ஆயிரமும், மக்காசோளம், கரும்பு, மஞ்சள் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரமும், உளுந்து பயருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும் என மத்தியக் குழுவினரிடம் விவசாய சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

மேலும், கொள்ளிடத்தில் தடுப்பணை அமைத்தல், பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கல், அரசு நிவாரணத் தொகை, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.குமார், கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி, வேளாண் துறை இணை இயக்குநர் மனோகரன், மக்கள் - செய்தித் தொடர்பு அதிகாரி சத்யசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter