கோவை குற்றாலம் விரைவில் திறப்பு: மாவட்ட வன அலுவலர் தகவல்!

கோவை: கோவை குற்றாலம் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் விரைவில் திறக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை குற்றாலம் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் விரைவில் திறக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்ட நிலையில் தற்போது கொரோனா நோய்ப் பரவல் குறைந்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. 

கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சுற்றுலாத்தலங்கள் சில கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் குரங்கு அருவி உள்ளிட்ட மூடப்பட்டிருந்த சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் கோவை மக்களின் பிரதான சுற்றுலாத் தலமாகக் கருதப்படும் கோவை குற்றாலம் திறக்கப்படவில்லை. இது பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தற்போது பெய்து வரும் பருவ மழையால் கோவை குற்றாலத்தில் கணிசமான அளவு நீர்வரத்து உள்ளது. இருப்பினும் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக குற்றாலம் செயல்படாமல் இருப்பதால் அப்பகுதியில் யானை உள்ளிட்ட வனவிலங்குகளின்  நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதுதவிர பருவ மழையினால் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாறைகள், கற்கள் விழுந்து சேதமடைந்துள்ளது. 

தற்போது குற்றாலத்தில் சீரமைப்புப் பணிகளை வனத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். பணிகள் முடிவடைந்த பிறகு கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.  

இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், 'கோவை குற்றாலம் நீண்ட நாட்கள் மூடி இருந்ததால் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் தற்போது அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கிறது. இருப்பினும் அரசு சுற்றுலாத் தளங்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளதால் குற்றாலத்தில் சீரமைப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் இரண்டு வாரங்களில் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. 

யானை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. பணிகள் அனைத்தையும் விரைவில் முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே கோவை குற்றாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்கப்படும்' என்றார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...