பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கோவையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் மதுபானங்களை சாலையில் கொட்டி போராட்டம்

பூரண மதுவிலக்கு மற்றும் போதை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர், மதுபானங்களை சாலையில் கொட்டி எதிர்ப்பை பதிவு செய்தனர்.



கோவை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், போதை பொருட்கள் விற்பனையை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் அக்கட்சியின் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் உபைதூர் ரஹ்மான் தலைமையில், டாடாபாத் பகுதியில் போராட்டம் நடைபெற்றது.



இந்த போராட்டத்தில் மது ஒழிப்பு, பூரண மதுவிலக்கு, போதை பொருட்கள் தடுப்பு குறித்த பதாகைகளை ஏந்தி சுமார் 50 க்கும் மேற்பட்டோர் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் மது ஒழிப்பு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தும் வகையில் மதுபானங்களை சாலையில் கொட்டி அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.



இதில் மாவட்ட செயலாளர்கள் ராமகிருஷ்ணன், முத்துப்பாண்டியன், நேருஜி, ஆலடி ஆனந்த், முரளி கிருஷ்ணன், சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் உபைதூர் ரஹ்மான் பேசியதாவது, தமிழகத்தில் இளைஞர்கள் மாணவர்கள் உட்பட பலரும் மதுவிற்கு அடிமையாகி உள்ளனர். தமிழக அரசு உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணம், கோவை மாநகராட்சியில் சொத்து வரி ஆகியவற்றை உயர்த்தி உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மத்திய அரசு தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் மத்திய அரசு நாட்டு நலனை பாராமல் மதத்தை பிரித்து அரசியல் செய்து ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுகிறது. இந்தியாவை வளப்படுத்த வேண்டுமே தவிர பிரிவினைவாதத்தை உண்டாக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...