கோவை வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண். 4, 10, 11, 21 ஆகிய பகுதிகளுக்கான சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் சரவணம்பட்டி வார்டு அலுவலகத்தில் வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், தங்களது சொத்து வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் முதல்முறையாக மண்டல தலைவர் வே.கதிர்வேலின் உத்தரவின் பேரில் வரும் 25 ஆம் தேதி மண்டல தலைவர் கதிர்வேல் தலைமையில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், வார்டு எண். 4,10,11, 21 பகுதிகளில் உள்ள வரிதாரர்கள் தங்களது சொத்துவரி விதிப்பு, குடிநீர் இணைப்பு ஆகியவற்றில் பெயர் திருத்தம், கதவு எண் திருத்தம், தெருவின் பெயர் திருத்தம் மற்றும் முடிவுற்ற பழைய சொத்துவரி புத்தகங்களுக்கு புதிய சொத்துவரி புத்தகம் பெறலாம்.
இந்த சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் பெயர் திருத்தம், இனிஷியல் திருத்தம், கதவு எண் திருத்தம், தெருவின் பெயர் திருத்தம், தொலைபேசி எண் திருத்தம் மற்றும் பதிவு செய்தல் முடிவுற்ற சொத்துவரி புத்தகத்திற்கு பதிலாக புதிய சொத்துவரி புத்தகம் வழங்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
திருத்தங்களை மேற்கொள்வதற்காக வரும் பொதுமக்கள் தங்கள் சொத்துவரி செலுத்திய ரசீது நகல் (2023-24), குடிநீர் கட்டணம் செலுத்திய ரசீது நகல் (2023-24), சொத்து தொடர்பான ஆவண நகல், இதர ஆவணங்கள் ஏதேனும் ஒரு அடையான அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.