கோவை விமான நிலைய நில விவகாரம்: வானதி ஸ்ரீனிவாசனை கண்டித்த முன்னாள் எம்பி பி.ஆர்.நடராஜன்

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை நிபந்தனையின்றி ஒப்படைக்க கோரிய பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசனை முன்னாள் எம்பி பி.ஆர்.நடராஜன் கடுமையாக சாடினார்.


கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை எவ்வித நிபந்தனையுமின்றி விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசனின் கோரிக்கைக்கு முன்னாள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் விமான நிலையமாக கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் திகழ்வதாகவும், சர்வதேச விமானங்கள் கூடுதலாக வந்து செல்லும் வகையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற தமிழ்நாடு முதல்வர் தலைமையிலான தமிழ்நாடு அரசு அதற்கான முனைப்பான பணிகளை முடுக்கிவிட்டதாகவும், விமான நிலைய விரிவாக்கத்திற்கு என ரூ.2,100 கோடி செலவு செய்து நிலங்களை கையகப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்நிலங்களை ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க உள்ளதாகவும், விமான நிலைய ஆணையம் விரிவாக்கப் பணிகளை செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு, நிலங்களை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க நிபந்தனை விதித்துள்ளதாகவும், மாநில அரசால் ஒப்படைக்கும் நிலங்களைக் கொண்டு விரிவாக்கம் செய்யப்படும் போது எதிர்காலத்தில் தனியாருக்கு தாரை வார்க்கப்படக் கூடாது என்பதே அந்த நிபந்தனை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், விமான நிலைய ஆணையம் இந்த நிபந்தனையை தளர்த்திட வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மோடி தலைமையிலான பாஜக அரசு ஏற்கனவே ஏழு விமான நிலையங்களை தனியாருக்கு தாரை வார்த்து உள்ளதாகவும், மேலும் 16 விமான நிலையங்களை விற்க ஏற்பாடுகள் செய்து வருவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழும நிறுவனத்திற்கு விற்பனை செய்ததை சுட்டிக்காட்டி, அதன் பிறகு அங்கு விமான நிறுத்த கட்டணங்கள், வர்த்தக நிறுவனங்களின் வாடகை, வாகன நிறுத்துமிட கட்டணங்கள் உள்ளிட்டவை பல மடங்கு உயர்த்தப்பட்டதாகவும், விமான பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்திற்கு நிலம் அளித்தோர் அனைவரும் சாதாரண பொதுமக்களே என்றும், இம்மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பில் வாங்கிய நிலங்களை சந்தை மதிப்பிற்கும் பல மடங்கு குறைவாக அரசுக்கு அளித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்கள் அளித்த நிலத்தை, தனியார் லாபம் பெறும் வகையில் அரசு பயன்படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வானதி ஸ்ரீனிவாசன் முதலமைச்சரை சந்தித்து, விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை ஒப்படைப்பதில், மாநில அரசு நிபந்தனையை தளர்த்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததை கண்டித்துள்ளார். அதானி உள்ளிட்ட கார்ப்ரேட்டுகளின் தூதுவராய் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இறுதியாக, திமுக அரசு, இவர்களின் நோக்கங்களை உள்வாங்கிக் கொண்டு, ஏற்கனவே எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...