புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் தமிழகம் முன்னேற்றம்: ஓராண்டில் 1,200 மெகாவாட் அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் சூரியஒளி மின்உற்பத்தியில் 1,000 மெகாவாட், காற்றாலை மின்உற்பத்தியில் 200 மெகாவாட் கூடுதலாக கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் சவாலாக உள்ளது.


புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் சூரியஒளி மின்உற்பத்தியில் 1,000 மெகாவாட், காற்றாலை மின்உற்பத்தியில் 200 மெகாவாட் கூடுதலாக மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். அதே சமயம், காலநிலை மாற்றம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது சூரியஒளி மின்உற்பத்தியில் 6,000 மெகாவாட், காற்றாலை பிரிவில் 10,500 மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இத்துறைகளின் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தி ஊக்குவிக்க வேண்டும் என தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு சூரியஒளி மின்உற்பத்தியாளர்கள் கூறுகையில், "தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் சூரியஒளி மூலம் மின்உற்பத்தி செய்வதற்கான வசதி உள்ளது. ஒரு மெகாவாட் திறன் கொண்ட கட்டமைப்பு வசதி ஏற்படுத்த ரூ. 4 கோடி முதலீடு தேவைப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 16 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கடந்தாண்டு 5,000 மெகாவாட்டாக இருந்த மொத்த கட்டமைப்பு வசதி, தற்போது 6,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது," என்றனர்.

காற்றாலைத்துறையில், ஒரு மெகாவாட் கட்டமைப்பு வசதி ஏற்படுத்த ரூ.8 கோடி முதலீடு தேவைப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 23 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். தமிழகத்தில் கயத்தாறு, தென்காசி, கோவை, தாராபுரம் போன்ற காற்று அதிகம் வீசும் இடங்களில் மட்டுமே கட்டமைப்பு ஏற்படுத்த முடியும்.

இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் கூறுகையில், "தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்திக்கான கட்டமைப்பு கடந்தாண்டு 10,300 மெகாவாட்டாக இருந்தது. தற்போது 200 மெகாவாட் கூடுதலாக அமைக்கப்பட்டு மொத்த மின் உற்பத்தி கட்டமைப்பு 10,500 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது," என்றனர்.

2024 ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 20 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 6,600 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 7,700 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இவ்வாண்டு 1,100 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி குறைந்துள்ளது. காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...