“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, பாஜக மற்றும் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து, அக்கட்சியின் நிர்வாகி செங்கோட்டையன் இன்று சிவானந்தா காலனி பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜக மற்றும் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.



பரப்புரையில்பேசிய அவர், “எங்கள் தலைவர் விஜய்க்கு 21 விதிகள் விதித்தாலும் மக்கள் சக்தியோடு ஆளப்போகும் ஒரே தலைவராக உள்ளார்.

இந்த ஊழல் ஆட்சி, வாரிசு ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும், வேலுமணியும் தூக்கி எறியப்பட வேண்டும்.



பத்து முறை தோல்வியுற்ற பழனிசாமிக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் நோட்டா ஓட்டாகத்தான் விழும். அது செல்லாத ஓட்டாகத்தான் இருக்கும்.

தமிழகத்தில் புரட்சி உருவாகப் போகிறது. விஜய்யால் மட்டுமே தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக்க முடியும்.

செந்தில் பாலாஜியைப் போன்றவர்கள் கோவைக்கு வராமல் கரூரில் முடக்கப்பட வேண்டும். கரூரில் வெல்ல முடியாத செந்தில் பாலாஜி தெற்கில் வெல்லலாம் என்று நினைத்தால் அந்த நினைப்பை தூள் தூளாக்குவோம்.

அவருக்கு ராஜதந்திரம் தெரியுமாம். அவருக்கு பத்து ரூபாய் வாங்குவதும் தெரியும். அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சிகளும் கொள்ளைக் கூட்டம். அதைத்தான் தகர்க்கும் சக்தி தவெக தான்.

விவசாயிகளை வாழ வைப்பது, பெண்களுக்கு முழு இலவச பேருந்து போன்ற எண்ணற்ற திட்டங்களை நமது தலைவர் அறிவித்துள்ளார்.

5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி ரூபாய் ஊழலை மிச்சப்படுத்தினால் எதையும் செய்ய முடியும் என்றும் அறிவித்துள்ளார். ஏன் கூட்டணி அமைக்கவில்லை என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்; அதற்கு ‘சிங்கம் சிங்கிளாக தான் வரும்’ என்று நான் பதில் அளித்துள்ளேன்.

எடப்பாடி பழனிசாமியும் வேலுமணியும் என்னை தூக்கி எறிந்தார்கள். அப்போது என்னை தாங்கிப் பிடித்தவர் விஜய் தான். எட்டு ஆண்டுகள் மன உளைச்சலில் இருந்தேன். இப்போது நிம்மதியாக இருக்கிறேன். ஏனெனில் நான் நல்லவருடன் சேர்ந்துள்ளேன்.

8 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என்று கொடுப்பார்கள். கொள்ளையடித்த பணத்தை வாங்கிக்கொண்டு, விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள்.

இங்கு விசில் ஊதிக் கொண்டிருக்கும் குழந்தைகளிடம் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். வரும் 23ஆம் தேதி காலை 5 மணிக்கு எழுந்து குளித்து தயாராகுங்கள். 6 மணிக்கு அப்பா அம்மா காலில் விழுங்கள். பிறகு விசில் சின்னத்திற்கு ஓட்டு போட்டால் தான் சாப்பிடுவேன் என்று சொல்லுங்கள். விசில் சின்னத்திற்கு ஓட்டு போட்டால் மட்டுமே சாப்பிடுவேன் என்று சொல்லுங்கள். முடிந்தது கதை.

பேத்தி தன்னிடம் சத்தியம் வாங்கியதால் 10 முறை திமுகவுக்கு ஓட்டுப் போட்ட ஒருவர், இந்த முறை தவெகவுக்கு ஓட்டு போடப் போகிறேன் என்று கூறுகிறார்.

பகலில் சண்டை, இரவில் கூட்டணி — இது ஒரு கட்சியா? அண்ணாமலை என்ன பாவம் செய்தார்? பாஜகவினருக்கு கொஞ்சமாவது மானம், ரோஷம் உள்ளதா? அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து எடுத்தால் தான் கூட்டணி என்று சொல்லுகிறார் துரோகி எடப்பாடி பழனிசாமி. இப்படிப்பட்ட தலைவரை யாராவது பார்த்திருக்கிறீர்களா?

நான் முதல்வராக வேண்டியிருந்தது. ஆனால் இரவு நேரத்தில் பெட்டி மாறிவிட்டது. அதனால் அவர் முதல்வராகிவிட்டார். அன்றைய நாள் என்னிடம் சசிகலா பேசினார். அப்போது கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும்; அவரே முதல்வராகட்டும் என்றேன்.

வேலுமணி ஒரு பக்கம் அவருக்குத்தான் முதல்வர் பதவி என்று அமர்ந்திருந்தார். அப்போது திடீரென மலைப்பாம்பு போல் காலில் விழுந்தார் எடப்பாடி பழனிசாமி. சசிகலா காலை பிடித்துக் கொண்டு விடவே இல்லை. ஆனால் அவர் 6 மாதங்களுக்குப் பிறகு பேசிய பேச்சுக்கு அளவே இல்லை.

நானே அங்கீகாரம் பெற்றவன் என்று கூறிக்கொண்டு தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை காலி செய்தார். நம்மை காப்பாற்றிய பாஜகவையும் ஏமாற்றினார். பிரேமலதாவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக கூறி அவரையும் ஏமாற்றினார். அவருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கொங்கு மண் விசில் சின்னத்தின் கோட்டை என்று நிரூபிக்க வேண்டும். எங்கள் மாவட்டத்தை இப்போதுதான் பீஸ் பீஸாக வெற்றி கொண்டு வந்தேன். இப்போது இந்த மாவட்டத்திற்கும் வந்துள்ளேன். அனைவரும் தெளிவாக உள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...