ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு : கோவையில் வளர்ந்து வரும் இளம் பேட்மிண்டன் வீராங்கனை நம்பிக்கை

கோவை : ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் பெற்றுத் தருவதே இலக்கு என கோவையில் வளர்ந்து வரும் இளம் பேட்மிண்டன் வீராங்கனை என்.தன்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவை : à®’லிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் பெற்றுத் தருவதே இலக்கு என கோவையில் வளர்ந்து வரும் இளம் பேட்மிண்டன் வீராங்கனை என்.தன்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 



கோவை மாவட்டத்தில் உள்ள வித்யா நிகேதன் பப்ளிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருபவர் என்.தன்யா. தமிழக சப் - ஜூனியர் அணியில் இடம்பிடித்துள்ள இவர், மாநில அளவிலான போட்டிகளில் பல்வேறு பட்டங்களை வென்றுள்ளார். மேலும், தான் பங்கேற்ற முதல் தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டியில் 15 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் வெற்றி பெற்று அசத்தியுள்ளார் தன்யா.

கடந்த 2014-ம் ஆண்டில் தனது 10 வயதில் இருந்து பேட்மிண்டனில் ஆர்வம் காட்டி வருகிறார். தந்தை ஒரு பேட்மிண்டன் வீரர் என்பதால், இந்த விளையாட்டில் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. பேட்மிண்டன் மீது கொண்ட பேரார்வத்தால், விளையாட்டுடன் சேர்த்து கல்வியை ஒருசேரக் கொண்டு செல்ல முடிவதாக தன்யா கூறினார். முதலில் விளையாட்டு மற்றும் படிப்பிற்கு நேரம் ஒதுக்குவதில் சிரமப்பட்ட அவர், நாளடைவில் தொடர் முயற்சியால், தற்போது இரண்டையும் ஒருசேரக் கொண்டு செல்வது எளிதாகி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை அதிகாலை 04.45 மணிக்கு தொடங்கும் அன்றாடப் பணிகள் இரவு 9 மணிக்கே முடிவடைகிறது. அதில், 90 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கும், 5 மணிநேரம் பேட்மிண்டன் பயிற்சிக்கும் செலவிடுகிறார். 

புனேவில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த யோனக்ஸ் சன்ரைஸ் ஆல் இந்திய சப்-ஜுனியர் பேட்மிண்டன் போட்டியில் விருதுநகரைச் சேர்ந்த எஸ். பிரவீனாவுடன் இணைந்து 15 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் இரட்டையர் பிரிவில் தன்யா சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம், இந்த ஆண்டில் மட்டும இவர் மகளிர் இரட்டையர் பிரிவில் தலா ஒரு தங்கம் மற்றும் வெள்ளியும், மகளிர் ஒற்றையர் பிரிவில் இரண்டு வெள்ளியும் வென்றுள்ளார். 



தொடர்ந்து, பல்வேறு பதக்கங்களை குவித்து வரும் தன்யா, தேசிய அளவில் கால்பதித்து, இந்தியாவின் சார்பில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்வதே தனது இலக்கு என விருப்பம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து தன்யா கூறியதாவது :- பேட்மிண்டன் வாழ்க்கை சிறப்பானதாக அமைய எனது பள்ளி கரஸ்பாண்டட் ரஜினி கிருஷ்ணமூர்த்தி அளிக்கும் ஊக்கமும், ஆதரவுமே காரணம். பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் எனது படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகின்றனர். சில போட்டித் தொடர் காரணமாக ஏதேனும் வகுப்புகளைப் புறக்கணிக்க நேர்ந்தால், அவர்கள் எனது பக்கபலமாக இருந்து உதவி செய்கின்றனர்.

எனது பயிற்சியாளர் மகேந்திரன், பயிற்சியின் போது கண்டிப்புடனும், பிற நேரங்களிலும் நட்புடனும் திகழ்ந்து வருகிறார். எங்களை புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு பயிற்சியின் போதும், போட்டித் தொடர்களின் போதும் சரியாக வழிநடத்துகிறார். கோவை பேட்மிண்டன் கூட்டமைப்பு மற்றும் தமிழக பேட்மிண்டன் சங்கமும் இணைந்து கொடுக்கும் ஊக்கம் என்னைப் போன்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் வாழ்க்கைக்குப் பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது. எனவே, அதற்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



போட்டி நடைபெறும் இடங்களுக்கு தாய் என்னுடன் வருவார். அவர், எனது உணவு முறை மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவார். வெற்றி, தோல்வி என ஏதுவாக இருந்தாலும் அவர் என்னுடன் இருப்பார். எனது தந்தை அளித்து சுதந்திரமே, தற்போது பேட்மிண்டன் வாழ்க்கையில் நான் அடியெடுத்து வைக்கக் காரணமாக இருக்கிறது, என்றார். 

நாடு முழுவதும் பல்வேறு திறமையான வீரர், வீராங்கனைகள் இந்தியாவின் சார்பில் சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும் நிலையில், நமது கோவையில் இருந்தும் ஒரு சாய்னா நேவால், பி.வி. சிந்து போன்ற சாதனை மங்கைகள் உருவாக வேண்டும் என்பதே நாம் அனைவரின் கனவாகும்.

Newsletter