ஹீரோ ஐ-லீக் கால்பந்து போட்டி : மண்ஷியின் ஹாட்ரிக் கோலினால் சென்னை சிட்டி அணி வெற்றி

கோவை : ஹீரோ ஐ-லீக் கால்பந்து போட்டியில் மண்ஷியின் சிறப்பான ஆட்டத்தால் கோகுலம் கேரளா எஃப்சி அணியை சென்னை சிட்டி எஃப்சி அணி எளிதில் தோற்கடித்தது.

கோவை : ஹீரோ ஐ-லீக் கால்பந்து போட்டியில் மண்ஷியின் சிறப்பான ஆட்டத்தால் கோகுலம் கேரளா எஃப்சி அணியை சென்னை சிட்டி எஃப்சி அணி எளிதில் தோற்கடித்தது. 



கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இரு அணியின் வீரர்களும் சமபலத்துடன் மோதினர். போட்டியின் 8-வது நிமிடத்தில் சென்னை அணியின் பெட்ரோ ஜாவியர் மண்ஷி முதல் கோலை அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்தார். இதைத் தொடர்ந்து, 10 நிமிடங்கள் கழித்து கேரள அணியின் மூஷா பதில் கோல் அடித்தார். பின்னர், 38-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கேரள அணியின் ஜோயில் சண்டே சரியாக பயன்படுத்தி கோல் அடித்து அசத்தினார். இதனால், போட்டியின் முதல் பாதியில் கேரள அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 



பின்னர், 2-வது பாதியில் இரு அணி வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் சென்னையின் பாண்டியன், கேரளாவின் ஜெயராஜ் ஆகியோருக்கு நடுவர் சிகப்பு அட்டை கொடுத்து வெளியேற்றினார். இதைத்தொடர்ந்து, இரு அணியும் 10 வீரர்களுடன் மீண்டும் மோதியது. 



2-வது பாதியில் சென்னை அணியினரின் ஆட்டத்தில் அனல் பறந்தது. குறிப்பாக, பெட்ரோ ஜாவியர் மண்ஷி 59 மற்றும் 80-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அணிக்கு முன்னிலை பெற்று தந்தார். இதைத் தொடர்ந்து, இரு அணியினராலும் மேற்கொண்டு கோல்கள் அடிக்க முடியவில்லை. இறுதியில் சென்னை அணி 3-2 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில், 24 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளது. 



இந்தப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்து பெட்ரோ ஜாவியர் மண்ஷி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், இத்தொடரில் இவர் அடிக்கும் 3-வது ஹாட்ரிக் கோல்கள் ஆகும். இதன்மூலம், இந்த ஐ-லீக் கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த சர்ச்சில் பிரதர்ஸ் அணியின் வீரர் வில்லீஸ் பிளாசாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.

Newsletter