Exclusive: கோவையில் 4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி வரும் எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானம்

கோவை : 4-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்றவாறு, கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (எஸ்.என்.ஆர்.) கிரிக்கெட் மைதானம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

கோவை : 4-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்றவாறு, கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (எஸ்.என்.ஆர்.) கிரிக்கெட் மைதானம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. 



தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொடரின் போட்டிகள், சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அரங்கேறுகின்றன. இந்த நிலையில், முதல்முறையாக கோவையில் டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இதற்காக, நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த ஆண்டில் இருந்தே நடைபெற்று வருகிறது. 



4-வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் இன்னும் 4 மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், எஸ்.என்.ஆர்., கிரிக்கெட் மைதானம் முழுவீச்சில் தயாராகி வருகிறது. 73 மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த மைதானத்தில் இரு அணியின் வீரர்களுக்கான பெவிலியன், நடுவர்களுக்கான அறைகள், 3-வது நடுவர் மற்றும் ஊழல் தடுப்புக் குழுவிற்கான அறைகள் என பல்வேறு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

"எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானம் ஏறத்தாழ தயாராகிவிட்டது. இந்த மாதத்தின் இறுதியில் திறக்கப்பட உள்ளது. இதன்மூலம், கோவை கிரிக்கெட் பிரியர்களின் ஆசை நிறைவேற இருக்கிறது," என்றார் ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் அகாடமியின் மூத்த பயிற்சியாளர் ஏ.ஜி. குருசாமி.

எஸ்.என்.ஆர். கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் வடிவேலு, "மைதானத்தின் பிட்ச் இந்த மாதத்திற்குள் தயாராகி விடும். இன்னும் 2 அடுக்குகளில் மண் மட்டும் கொட்டி சரி செய்யப்பட வேண்டிய நிலை உள்ளது. மைதானத்தின் சுற்றுப்புறம் சமப்படுத்தும் பணிகள் முடிவடைந்து விட்டன. எஞ்சிய பணிகள் விரைவில் முடிக்கப்படுவதற்கு ஏற்ப, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது," என்றார். 



இந்த மைதானம் தயார் செய்யப்பட்டவுடன், நாள்தோறும் பயன்படுத்தும் வகையில் போட்டிகளையும், பயிற்சிகளையும் நடத்த கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, உள்மாநில அளவிலான போட்டிகளையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதேவேளையில், "சி.டி.சி.ஏ., லீக் போட்டிகளையும் எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை மேம்படுத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ரூ. 3 கோடி ஒதுக்கப்பட்டது. எனவே, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் போட்டிகளுக்கு, இங்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். ப்ளூட்லைட், கேலரி, ப்ரஸ் பாக்ஸ் மற்றும் பயிற்சி பகுதி என பல்வேறு பணிகள் முடிவடைந்துவிட்டன. தற்போது, பார்வையாளர்களுக்கு தற்காலிக இருப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது," என கோவை கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் எஸ். கவுதம் கூறினார். 



இது குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கூறுகையில், "டர்ஃப் மைதானம், கோவை மாவட்டத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களின் மிகப்பெரிய கனவாகும். கோவையில் நிறைய தரமான கிரிக்கெட் வீரர்கள் உருவாகின்றனர். ஆனால், அவர்களது திறமையை மேம்படுத்த முறையான டர்ஃப் மைதானம் இதுவரை கிடைக்கவில்லை. தற்போது, எஸ்.என்.ஆர். மைதானம் உள்ளூர் வீரர்களுக்கு சிறந்த அடித்தளமாக இருக்கும்," என தெரிவித்தார். 

Newsletter