வேளாண் பல்கலை.,யில் விதைகளை ஊக்குவித்தல் மற்றும் சந்தைபடுத்துதல் பயிற்சி

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விதை மையத்தில் “விதை உற்பத்தி, சுத்திகரிப்பு, விதைகளை ஊக்குவித்தல் மற்றும் சந்தைபடுத்துதல்” பற்றிய 21 நாட்கள் நடக்கும் குளிர்காலப் பயிற்சி முகாம் தொடங்கியது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விதை மையத்தில் “விதை உற்பத்தி, சுத்திகரிப்பு, விதைகளை ஊக்குவித்தல் மற்றும் சந்தைபடுத்துதல்” பற்றிய 21 நாட்கள் நடக்கும் குளிர்காலப் பயிற்சி முகாம் தொடங்கியது. 



கடந்த 14-ம் தேதி தொடங்கிய இந்த முகாம் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முன்னாள் கு. ராமசாமியின் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, பயிற்சிக் கையேட்டினை வெளியிட்டு துணைவேந்தர் பேசியதாவது :- நம் நாட்டில் விதைகள் விதைச் சட்டத்தின் விதைத்தரத்தின்படி, நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. காலத்திற்கேற்ப, தொழில்நுட்பங்கள் கடைபிடிக்கப்படுவதில் மாற்றங்கள் ஏற்படுவதால், தற்போது விவசாயிகள் விதைகளுக்கு பதில் நாற்றுகளாகவே வாங்கிப் பயன்படுத்த தயாராகி வருகின்றனர். 



வளமான வீரிய நாற்று உற்பத்திக்கான தர நிர்ணயங்களைக் கண்டறிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், ஆராய்ச்சி திட்டங்கள் விவசாயிகளின் அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி அரசின் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்றம் செய்திட வேண்டும், இவ்வாறு கேட்டுக் கொண்டார்.



இப்பயிற்சியில் குஜராத், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, காஷ்மீர், உத்திர பிரதேசம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 25 பேர் கலந்து கொள்கின்றனர். இப்பயிற்சியில் விஞ்ஞானிகளுக்கு விதை உற்பத்தி, விதைப்பின் முன் மற்றும் பின் கையாளப்படும் விதைத்தர மேம்பாட்டு முறைகள் மற்றும் விதை சந்தைப்படுத்துதலில் காணப்படும் நவீன யுக்திகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். வயல்வெளி பரிசோதனை, விதை ஆய்வு மற்றும் தேசிய ஆராய்ச்சி நிலையங்களைப் பார்வையிடவும் பயிற்சி அமைக்கப்பட்டுள்ளது. 

Newsletter