ஈஷா விவசாய இயக்கம் சார்பில் கடந்த ஓராண்டில் 450 விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி

கோவை : ஈஷா விவசாய இயக்கம் சார்பில் கடந்த ஓராண்டில் 450 தமிழக விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை : ஈஷா விவசாய இயக்கம் சார்பில் கடந்த ஓராண்டில் 450 தமிழக விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.



ஈஷா விவசாய இயக்கம் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான இயற்கை விவசாய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 60-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாய பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், சுமார் 6,000 தமிழக விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். குறிப்பாக, கோவையைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி திரு.வள்ளுவன் ஈஷா விவசாய இயக்கத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக இணைந்து செயலாற்றி வருகிறார். இதன்மூலம், பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரில் அமைந்துள்ள அவரது பண்ணை ஒரு மாதிரி இயற்கை விவசாய பண்ணையாக மாற்றப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக, கடந்த ஓராண்டில் மட்டும் 4 பயிற்சி வகுப்புகள் அவருடைய பண்ணையில் நடத்தப்பட்டுள்ளது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து 450 விவசாயிகள் பங்கேற்று பயன் பெற்றுள்ளனர். இதனிடையே, தென்னையில் ஐந்தடுக்கு மாதிரி பயிர் சாகுபடி செய்வது குறித்த பண்ணை பார்வையிடல் நிகழ்ச்சி அவரது பண்ணையில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 200 தென்னை விவசாயிகள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் அடர்ந்த காடு போன்று உள்ள பண்ணையை முழுவதுமாக சுற்றி பார்த்தனர். 



தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக வாழை மற்றும் கறிவேப்பிலை பயிரிடுவது, துணைப் பயிராக ஒட்டுரக ஜாதிக்காய் பயிரிடுவது, மகாகனி போன்ற டிம்பர் மரங்களில் மிளகு பயிரிடுவது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து முன்னோடி இயற்கை விவசாயி திரு.வள்ளுவன் விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், தழைச்சத்தை நிலைப்படுத்தும் கிளைரிசிடியா, மண்வளத்தை அதிகரிக்க உதவும் மூடாக்கு, நீர் மேலாண்மை உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் தனது வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். ஈஷா வேளாண் காடுகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ் மாறன் வேளாண் காடு வளர்ப்பு விவசாயிகளிடம் பேசினார்.

Newsletter