தேர்தல் விதிமுறை: இனி ரூ. 50,000 மேல் பணம் எடுத்துச் சென்றால் ஆதாரம் வேண்டும்..! .

தேர்தல் விதிமுறை: இனி ரூ. 50,000 மேல் பணம் எடுத்துச் சென்றால் ஆதாரம் வேண்டும்..!


கோவை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர், சுனில் அரோரா அதிகாரப்பூர்வமாக தமிழக தேர்தல் அறிவிப்பை கடந்த 26 ஆம் தேதி வெளியிட்டார். இதை தொடர்ந்து, தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

அதில் குறிப்பாக, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறிப்பிட்ட அளவு பணத்தை தாண்டி எடுத்துச் செல்ல வேண்டும் என்றால், அதற்கான ஆவணங்களின்றி எடுத்துச் செல்ல முடியாது, என்பது தேர்தல் நடத்தை விதிமுறையின் முக்கியமான கட்டுப்பாடு ஆகும்.

ஆவணம் இல்லாமல் பணம் எடுத்துச் செல்ல தடை, பறிமுதல்..!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பரிசு மற்றும் பணம், லஞ்சம்வழங்கப்படுவதை தடுப்பதற்காக, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையக் குழுவினர், காவல் துறையினர், துணை ராணுவ படையினர் கொண்ட கூட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதற்காக, தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட வங்கி கணக்கில் இருந்து அடிக்கடி பணம் பரிமாற்றம் செய்வது, அதிக பணம் எடுப்பவர்கள் குறித்த தகவல்களை கண்காணிக்க வங்கி உயர் அதிகாரிகளுடன், பணம் நடமாட்டத்தை கண்காணிப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியுள்ளது.

அவ்வாறு, சந்தேகத்திற்கு இடமாக நடக்கும் பண பரிவர்த்தனைகள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி வங்கி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும், பொதுமக்களும் 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, இது குறித்து புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்கள், வியாபாரிகள், அரசியல் கட்சியினர் ரூபாய் 50 ஆயிரத்திற்கும் அதிகமாக பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், 5 லட்ச ரூபாய்க்கும் அதிகமான வங்கிப் பண பரிவர்த்தனைகள் ரிசர்வ் வங்கி உதவியுடன் கண்காணிக்கப்படும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள்: பணம் கொண்டு செல்வதற்கு விலக்கு அளிக்க கோவை தொழில் துறையினர் கோரிக்கை

தொழில் நகரமான கோவையில், பல்வேறு தொழில் அமைப்பினர் இந்த விதிமுறையை பின்பற்றுவதில் சிக்கல் உள்ளதை சுட்டிக்காட்டி தங்களுக்கு சிறப்பு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மூலமாக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுடன், அரசு டெண்டர் எடுத்துள்ள நிறுவனங்களும், ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளில் வேலை செய்து வரும் தொழிலாரகளுக்கு, வார சம்பளம் வழங்க வேண்டி உள்ளதால், இவர்களுக்கும் சிறப்பு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் கட்சியினருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

குறிப்பாக, அரசியல் கட்சியினர், வாகனங்களில் எடுத்துச் செல்லும் கட்சி போஸ்டர்கள், மதுபானம், பரிசு பொருட்கள் போன்றவற்றின் மதிப்பு ரூபாய் 10 ஆயிரத்தை தாண்டக்கூடாது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பேச்சாளர்கள், தங்களது தனிப்பட்ட செலவுக்காக ரூபாய் 1 லட்சம் வரை ரொக்கமாக வைத்துக் கொள்ளலாம் எனவும், ஆனால் அந்த தொகைக்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்த பணத்தை எவ்வாறு பெறுவது?

மேலே குறிப்பிட்ட விதிமுறைகளை மீறும் பட்சத்தில், பொருள் மற்றும் பணத்தை கண்காணிப்பு அதிகாரிகள் வீடியோ பதிவு செய்து அதனை பறிமுதல் செய்து, அவற்றை 24 மணி நேரத்தில், அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பொருள் மற்றும் பணத்திற்கு உரிய ஆவணங்களை காண்பித்து, அவற்றை 24 மணி நேரத்திற்குள் சிறப்புக் குழுவின் அனுமதியுடன் பெற்றுக் கொள்ளலாம். தவறும் பட்சத்தில்,காவல்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையில் ஈடுபடுவார்கள், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் தேர்தல் செலவு தொகையை 10 சதவீதம் உயர்த்திய தேர்தல் ஆணைய விதிகளின்படி,சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூபாய் 30 லட்சத்து 80 ஆயிரம் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...