கோவையில் ஏரி, குளங்களில் விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர் பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுத்துக்கொள்ள அழைப்பு

கோவை : கோவை மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளிலிருந்து, வண்டல் மண் விவசாயப் பயன்பாட்டிற்கும், மண்பாண்டத் தொழிலாளர்களும் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி அழைப்பு விடுத்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகளிலிருந்து, வண்டல் மண் விவசாயப் பயன்பாட்டிற்கும், மண்பாண்டத் தொழிலாளர்களும் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி அழைப்பு விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- தமிழக விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையிலும், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி, ஆழப்படுத்தும் நோக்கத்திலும், ஏரி குளங்களில் விவசாயத்திற்கு தேவையான வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என முதலமைச்சரால் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கம் சட்டம், 30-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்களும், பொதுமக்களும் சொந்த தேவைக்கு மற்றும் விவசாயிகளின் விவசாய தேவைக்கு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகளிலிருந்து களிமண், வண்டல் மண், சவுடு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

அரசு விதிகளின்படி, விவசாயிகள் விவசாய தேவைக்கு வண்டல் மண், களிமண் நன்செய் நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 75 கனமீட்டரும், (25 டிராக்டர்) புன்செய் நிலத்திற்கு 1 ஏக்கருக்கு 90 கனமீட்டரும் (30 டிராக்டர்) மற்றும் இதர சொந்த பயன்பாட்டிற்கு மண், சவுடு, கிராவல் ஆகியவை 30 கனமீட்டர் (10 டிராக்டர்) மற்றும் மண்பாண்டங்கள் செய்பவர்களுக்கு 60 கனமீட்டர் (20 டிராக்டர்) ஆகியவை கட்டணமின்றி எடுத்துச் செல்ல தொடர்புடைய வட்டாட்சியர்களால் அனுமதிக்கப்பட்டது.

அதேபோல, மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவுரைப்படி, மீண்டும் கட்டணமின்றி விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களின் தேவைக்கு களிமண், வண்டல் மண், சவுடு ஆகியவை அரசு விதிகளின்படி எடுத்துக்கொள்ள தொடர்புடைய வட்டாட்சியரால் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், வண்டல் மண் மிகுதியாக உள்ள ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் புதிதாக கண்டறியப்பட்டு, விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு நீர் நிலைகளில் கட்டணமின்றி வண்டல் மண், களிமண் ஆகியவை வெட்டியெடுக்கப்படும் போது மேற்கண்ட நீர்நிலைகள் தூர்வாரி ஆழப்படுத்தப்படுவதால் மழைக்காலங்களில் கூடுதலான மழைநீரை சேமிக்க இயலும். ஏரி குளங்களில் வெட்டியெடுக்கப்படும் வண்டல்மண் விவசாய நிலங்களில் கொட்டி பயன்படுத்தப்படும் போது, அது மண்ணிற்கு சிறந்த வளத்தை கொடுத்து இரசாயனம் கலந்த செயற்கை உரங்களை பயன்படுத்துவதை குறைத்து விளைச்சலை அதிகரிக்க செய்கிறது.

எனவே, இந்த அரிய வாய்ப்பினை விவசாய பெருமக்கள் அதிகளவில் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இத்திட்டம் உரிய முறையில் செயல்படவும், தவறுகள் ஏதும் நிகழாவண்ணம் உறுதி செய்திட ஒவ்வொரு வட்டத்திற்கும் துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்கள் கண்காணிப்பு பணியினை மேற்கொள்வார்கள், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...