கோவை கார் வெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ-க்கு மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்திய நிலையில், கோவை மாவட்டத்தில்‌ பாதுகாப்பினை மேலும்‌ உறுதி செய்திடவும்‌ காவல்‌துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌.


கோவை: கோவை உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடித்தது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை உக்கடம்‌ பகுதியில்‌ 23-10-2022 அன்று நிகழ்ந்த கார்‌ சிலிண்டர்‌ வெடிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும்‌ விசாரணை குறித்தும்‌, பொதுவான சட்டம்‌ ஒழுங்கு நிலவரம்‌ குறித்தும்‌ முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ இன்று, அக்டோபர் 26 ஆம் தேதி தலைமைச்‌ செயலகத்தில்‌ விரிவான ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

இந்த ஆய்வுக்‌ கூட்டத்தில்‌, கோவை உக்கடம் அருகே நிகழ்ந்த கார்‌ சிலிண்டர்‌ வெடிப்பு சம்பவம்‌ தொடர்பாக, காவல்‌ துறையினரால்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ விசாரணை குறித்தும்‌, கோவை மாவட்டத்தில்‌ செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள்‌ குறித்தும்‌ விவாதிக்கப்பட்டது.

இந்தச்‌ சம்பவம்‌ தொடர்பான வழக்கு விசாரணையின்‌ தற்போதைய நிலை குறித்தும்‌, கோவை மாவட்டத்தில்‌ பாதுகாப்பினை மேலும்‌ உறுதி செய்திடவும்‌ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ காவல்‌துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌.

இதுபோன்ற சம்பவங்களின்‌ விசாரணையில்‌, மாநிலம்‌ தாண்டிய பரிணாமங்களும்‌, பன்னாட்டுத்‌ தொடர்புகளும்‌ இருக்க வாய்ப்புள்ளதால்‌, இவ்வழக்கின்‌ விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிற்கு (NIA) மாற்றிட ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை செய்திட இந்தக் கூட்டத்தில்‌ முடிவு செய்யப்பட்டது.

மேலும், கோவை மாநகரின்‌ பாதுகாப்பினை வலுப்படுத்திட கரும்புக்‌ கடை, சுந்தராபுரம்‌, கவுண்டம்பாளையம்‌ ஆகிய மூன்று பகுதிகளில்‌ புதிய காவல்‌ நிலையங்களை உடனடியாக அமைக்க வேண்டும்.

மாநிலத்தில்‌ இதுபோன்ற நிகழ்வுகள்‌, சம்பவங்கள்‌ வருங்காலங்களில்‌ நடைபெறாமல்‌ தடுத்திடும்‌ வகையில்‌, காவல்‌ துறையில்‌ ஒரு சிறப்புப்‌ படையை உருவாக்க வேண்டும்.

கோவை உட்பட தமிழ்நாட்டின்‌ முக்கிய நகரங்களிலும்‌, மக்கள்‌ அதிகம்‌ வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும்‌, கூடுதல்‌ நவீன கண்காணிப்புக்‌ கேமராக்களை விரைவில்‌ பொருத்துவதற்கு‌ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்‌. மாநிலத்தின்‌ உளவுப்‌பிரிவில்‌ கூடுதல்‌ காவல்‌துறை அலுவலர்களை நியமனம்‌ செய்ய வேண்டும்.‌

இதுபோன்ற சட்டவிரோதச்‌ செயல்களில்‌ ஈடுபடுவோரைப்‌ பற்றியும்‌, அவர்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களைப்‌ பற்றியும்‌ நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கிடவும்‌, அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்தக்‌ கூட்டத்தில்‌, தலைமைச்‌ செயலாளர்‌ இறையன்பு, உள்துறை கூடுதல்‌ தலைமைச்‌ செயலாளர்‌ பனீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர்‌, சைலேந்திரபாபு, காவல்‌துறை கூடுதல்‌ இயக்குநர்‌ (நுண்ணறிவு) டேவிட்சன்‌ தேவாசிர்வாதம்‌ மற்றும்‌ காவல்‌துறை உயர்‌ அலுவலர்கள்‌ பலரும் கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...