நியாய விலை கடைகளிலே இனி கேஸ் சிலிண்டர் வாங்கலாம் - வடகோவையில் உணவு பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று துவக்கி வைத்தார்

வடகோவை பகுதியில் இயங்கி வரும் நியாய விலை கடைகளில் சமையல் எரிவாயு விற்பனையை துவக்கி வைத்த உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவையில் உள்ள பல்வேறு நியாய விலை கடைகளில் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.



கோவை: ரேஷன் கடைகளில் சிலிண்டர் விநியோகம் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.



பல்வேறு மாவட்டங்களில் அந்த திட்டமும் செயல்பட தொடங்கிய நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்று கோவை வடகோவையில் பகுதியில் இயங்கி வரும் நியாய விலை கடையில் சமையல் எரிவாயு விற்பனையை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.



அதனை தொடர்ந்து ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து நடைபெற உள்ள 69ஆவது கூட்டுறவு மாநில விழா பற்றியும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களை பற்றியும் பேசினார்.

அவர் பேசியதாவது:-



இரண்டு மற்றும் ஐந்து கிலோ கேஸ் சிலிண்டர் நியாய விலை கடைகளில் விற்பனை செய்யும் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை 12 மாவட்டங்களில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தோடு இணைந்து மாநில அரசு இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாகவும் இதனால் தொழிலாளர்கள், சாலை மற்றும் நடைமேடைகளில் கடை அமைப்பவர்கள், மாணவர்கள், வெளியூர்களில் தங்கி வேலைக்கு செல்பவர்கள், மீனவர்கள் ஆகியோர் அதிகமாக பயன்பெறுவர் எனவும் கூறினார்.

மேலும் கேஸ் சிலிண்டர் பெறுவதற்கு பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு, முகவரிக்கான தகவல்களை மட்டும் அளித்து எளிதாக கேஸ் சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம். இதனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இதனால் சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவது வெகுவாக குறையும் என தெரிவித்தார்.

மேலும் நாளைய தினம் 69ஆவது கூட்டுறவு மாநில விழா கோவை கொடிசியா வளாகத்தில் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுவதோடு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கூட்டுறவு துறையை புதுப்பொலிவுடன் முன் கொண்டு செல்ல முதலமைச்சர் மற்றும் அமைச்சரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநிலத்தில் உள்ள 5164 நியாய விலை கடைகள் ISO தரச்சான்று பெற்றுள்ளது. 2952 கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

கடன்களை பொறுத்தவரை டெல்டா மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 697 விவசாய சங்கங்களின் மூலம் 1 லட்சத்து 88 ஆயிரம் விவசாயிகளுக்கு 1231 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் உட்பட கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 801 கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு 8.47 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ஒரு லட்சத்து 21 ஆயிரம் விவசாயிகளுக்கு, 216.8 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பயோமெட்ரிக் மற்றும் கருவிழி பரிசோதனை ஆகியவற்றின் மூலம் கடத்தல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கோவிட் காலகட்டத்தில் ரேஷன் கடைகளின் மூலம் உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வரும் ஆண்டுகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் கலந்து கொண்டார்.



இதனையடுத்து, கோவையில் உள்ள பல்வேறு நியாய விலை கடைகளில் கூட்டுறவுதுறை அரசு முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...