மூடநம்பிக்கையால் பாம்புக்கடிக்கு ஆளான விவசாயி - தவறான முதலுதவியால் வெட்டப்பட்ட நாக்கு: போராடி பிழைக்க வைத்த மருத்துவர்கள்

ஈரோட்டை சேர்ந்த விவசாயி ஒருவர் கனவில் பாம்பு வந்ததாக பூசாரியை அணுகிய போது, பரிகாரத்தின் போது கண்ணாடி விரியன் பாம்பு நாக்கில் கடித்த நிலையில், தவறான முதலுதவியால் நாக்கு வெட்டுப்பட்ட நிலையில், மருத்துவர்கள் தீவிரமாக போராடி பிழைக்க செய்துள்ளனர்.



ஈரோடு: ஈரோட்டைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவரின் கனவில் பாம்பு தோன்றியுள்ளது. இதுகுறித்து அவர் ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

அந்த ஜோதிடரும் கோவில் ஒன்றை சுட்டிக்காட்டி அங்கு உள்ள சாமியார் பாம்புகளை வளர்த்து வருவதாகவும், அவரிடம் உள்ள பாம்புக்கு பரிகாரம் செய்தால் பாவங்கள் நீங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய அந்த விவசாயி கோவில் பூசாரியிடம் சென்று நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதற்கு பூசாரி, தன்னிடம் 20க்கும் மேற்பட்ட பாம்புகள் உள்ளதாக கூறி, கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பை எடுத்து, பாம்பின் முன் நாக்கை நீட்டி பரிகாரம் செய்யச் சொன்னதாக தெரிகிறது.



இதனை நம்பி விவசாயி பாம்பின் முன் சென்று நாக்கை நீட்ட, கொடிய விஷமுடைய பாம்பு விவசாயியின் நாவில் கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி, உடனே கத்தியை எடுத்து விவசாயியின் நாக்கை வெட்டினார்.

அப்போது, ரத்தப்போக்கு அதிகமானதால் விவசாயி சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். இதனையடுத்து, விவசாயியை ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் செந்தில் குமரன் அடங்கிய குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கடுமையான போராட்டத்திற்கு பிறகு அந்த விவசாயி தற்போது உயிர் பிழைத்துள்ளார்.

இதனிடையே பாம்புகள் மற்றும் பாம்புக்கடி குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் லண்டனில் உள்ள ரெடிங் பல்கலைக்கழக பேராசிரியர் சக்திவேல் வையாபுரி மற்றும் மருத்துவர் செந்தில் குமரன் இணைந்து சுவிட்சர்லாந்தை சேர்ந்த டாக்சின்ஸ் என்ற ஆராய்ச்சி இதழில் இதுகுறித்த கட்டுரையை எழுதியுள்ளனர்.

இந்த ஆராய்ச்சி கட்டுரை தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான சக்திவேல் வையாபுரி கூறியதாவது, உலக அளவில் பாம்புக்கடியால் ஆண்டுதோறும் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வரை மரணிக்கின்றனர் என்பது எங்களது ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.



பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்னென்ன வகையான விஷப்பாம்புகள் உள்ளன? என்பது குறித்து கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.



பாம்புகள் குறித்த மூட நம்பிக்கையை சமூகத்தில் இருந்து களைய வேண்டும். இது போன்ற மூட நம்பிக்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் தற்போது டாக்சின்ஸ் ஆராய்ச்சி இதழில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மருத்துவர் செந்தில் குமரன் கூறியதாவது, பாம்பு கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமே தவிர மூடநம்பிக்கைகளையும் வீட்டு வைத்தியத்தையும் செய்யக்கூடாது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் நாக்கு வெட்டப்பட்டிருந்தது.

அவருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. செயற்கை சுவாசம் கொடுப்பதில் கடும் சிரமங்களை சந்தித்தோம். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு அந்த விவசாயியை உயிர் பிழைக்க செய்துள்ளோம். பாம்புக்கடி தொடர்பான விழிப்புணர்வு மிகவும் அவசியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...