கோவையில் ரூ.624 கோடி மதிப்பீட்டில் 6296 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன - தமிழ்நாடு வீட்டு வசதி துறை அரசு முதன்மைச் செயலாளர் தகவல்

கோவை டவுன்ஹால், வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் கட்டப்பட்ட வரும் மறு கட்டுமான குடியிருப்புகளை ஆய்வு செய்த தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலாளர் ஹிதேஷ் குமார் ரூ.624 கோடி மதிப்பீட்டில் கோவையில் 6,296 குடியிருப்புகள் கட்டப்படுகின்றன என்று கூறினார்.



கோவை: தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் கோயம்புத்தூர் மாநகராட்சி டவுன்ஹால், வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் ரூ.45.05 கோடி செலவில் 448 மறு கட்டுமான குடியிருப்புகள் பணிகள் நடந்து வருகிறது.

இந்த கட்டுமான பணிகளை இன்று தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹிதேஷ் குமார் எஸ். மக் வானா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், ஆர்.எஸ். புரம், மெக்கேரிகர் வீதியில் ரூ.7.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 85 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பையும், செல்வபுரம் ஐ.யூ.டி.பி காலனியில் ரூ.46.44 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 528 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன் பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் மாநகர வரைவு பெருந்திட்ட அறிக்கை மற்றும் வரைபடம் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.



தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலாளர், ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா தலைமையில் நடந்த கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு நகர்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலாளர் ஹிதேஷ் குமார் எஸ் மக்வானா கூறுகையில்:



கோயம்புத்தூர் நகர்புற வளர்ச்சி பகுதியை பொருளாதார மண்டலமாக கொண்டு நவீன, சமூக உள்கட்டமைப்பு வசதிகளுடன் மாநகர மக்களுக்கு நிலையான சிறந்த வாழ்விடத்தை உருவாக்குவது இந்த திட்டத்தில் நோக்கமாகும்.

நிலத்தின் உகந்த பயன்பாடு, பரவலாக்கப்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பசுமையை பாதுகாத்தல், ஜி. ஐ. எஸ் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு வகையான அபிவிருத்திகளை ஒன்றிணைத்து, எதிர்கால வளர்ச்சியினை திட்டமிடுதல் மற்றும் புதிய நில வகைப்பாட்டை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்டவைகள் முக்கிய நோக்கமாகும்.

தற்போது கோயம்புத்தூர் நகர்ப்புற வளர்ச்சி பகுதி 1531.53 சதுர கிலோமீட்டர் ஆக விரிவு படுத்தப்பட்டு வரைவு நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் பகுதியுடன் 4 நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 67 ஊராட்சிகளுடன் கோயம்புத்தூர் நகர்புற வளர்ச்சி பகுதி அமைகிறது.

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மேட்டுப்பாளையம், வால்பாறை, பொள்ளாச்சி, செல்வபுரம், உக்கடம், காந்திபுரம், வெரைட்டி ஹால், ஆர்.எஸ். புரம் உள்ளிட்ட பகுதிகளில் 26 திட்டப்பணிகள் மூலம் ரூ.624.11 கோடி மதிப்பீட்டில் 6796 குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. இதில் 10 திட்டப் பணிகள் மூலம் ரூ.122.62 கோடி மதிப்பீட்டில் 2,261 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

மீதமுள்ள 4,535 குடியிருப்புகள் ரூ.501.49 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை விரைவாக முடிக்கிற தேவையான நடவடிக்கைகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும், என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...