கோவை பம்ப்செட் நிறுவனங்களில் 30 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடி - 12 நாட்கள் கட்டாய விடுமுறை..!

ஜிஎஸ்டி, மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக பம்ப்செட் விலை உயர்வால் விற்பனை பாதிக்கப்பட்டு உள்ளதால் நெருக்கடியை சமாளிக்க மாதந்தோறும் 12 நாட்கள் கட்டாய விடுமுறை திட்டம் அமலாகி உள்ளதாக தகவல்.



கோவை: இந்தியா முழுவதும் வீடு மற்றும் விவசாயத்துக்கான பம்ப்செட் பயன்பாட்டில் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்கள் 50 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

0.5 எச்.பி (குதிரை திறன்) முதல் அதிகபட்சமாக 50 எச்.பி மற்றும் அதற்கு மேல் திறன் கொண்ட பம்ப் செட்கள் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படுகின்றன. குறைந்தபட்சம் ரூ.1,500 முதல் அதிகபட்சமாக ரூ.4 லட்சம் மதிப்பிலான பல்வேறு மாடல்களில் பம்ப் செட்கள் தயாரிக்கப்படுகின்றன.

பம்ப்செட் விற்பனை மிகவும் குறைந்துள்ளதால் கோவையில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் மாதந்தோறும் 12 நாட்கள் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டு வருவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (சீமா) தலைவர் விக்னேஷ் கூறியதாவது, இந்த ஆண்டு நாடு முழுவதும் வழக்கத்தை விட பருவமழை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் விவசாய தேவைக்கான பம்ப்செட் விற்பனை மந்தமாக உள்ளது.

ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் மூலப்பொருட்கள் விலையும் தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பம்ப்செட் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வு காரணமாக விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் மாதந்தோறும் 12 நாட்கள் (ஞாயிறு உட்பட) கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதேபோல், கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மணிராஜ் கூறியதாவது,



கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின் இன்று வரை பம்ப்செட் தொழில் குறிப்பாக குறுந்தொழில் நிறுவனங்கள் நெருக்கடியில் இருந்து மீள முடியவில்லை. பலர் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தி உள்ளனர்.

குறுந்தொழில்களுக்கு வழக்கமாக தமிழகம், கர்நாடகா, கேரளாவில் தான் அதிக விற்பனை இருக்கும். தற்போது விற்பனை மிகவும் குறைந்துள்ளது. 40 பேர் பணியாற்றிய குறுந்தொழில் நிறுவனங்களில் தற்போது 10 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 30 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடியை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்.

ஜிஎஸ்டி வரி, மூலப் பொருட்களின் விலையை மத்திய அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களில் தேவைப்படும் பம்ப்செட் பொருட்களுக்கான தேவையில் குறிப்பிட்ட சதவீதம் குறுந்தொழில் நிறுவனங்களிடம் இருந்து பெறுவதை கட்டாயமாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...