கோவையில் குடும்பத் தகராறில் இளைஞர் கொலை - அக்காவின் கணவர் கைது

கோவை இடையர்பாளையத்தில் குடும்பத் தகராறில் வீட்டில் தனியாக இருந்த மனைவியின் தம்பியை கொலை செய்த பாலசுப்ரமணியன் என்பவரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை இடையார்பாளையம் அடுத்துள்ள கோவில்மேடு சபேதார் 2வது வீதியில் தனது தாயார் வேலம்மாளுடன் வசிப்பவர் மணிகண்டன்(வயது33). இவர் மர வேலை செய்து வருகிறார். இவருக்கு தங்கமாரி மற்றும் செல்வி என 2 சகோதரிகள் உள்ளனர்.

கடந்த 21ம் தேதி வேலாண்டிபாளையம் சின்னண்ணன் செட்டியார் வீதியில் வசிக்கும் சகோதரி தங்கமாரியை அவரது கணவர் ஐயப்பன் அடித்ததாக மணிகண்டனுக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் 23ம் தேதி குடிபோதையில் இருந்த மணிகண்டன், சகோதரி தங்கமாரி வீட்டிற்கு சென்று ஐயப்பனை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இடையார்பாளையத்தில் வசிக்கும் தமது சகோதரி செல்விக்கு, தங்கமாரி போன் செய்து, தம்பி மணிகண்டனை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு செல்வியின் கணவர் பாலசுப்ரமணியன், ஏற்கனவே உன் தம்பி குடிபோதையில் என்னுடன் வம்பு இழுக்கிறான், நான் வரவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த தங்கமாரி மற்றும் செல்வி ஆகியோர் பாலசுப்ரமணியனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன், நேற்று மாமியார் வேலம்மாள் தனது வீட்டிற்கு வந்திருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த மணிகண்டனைப் பார்க்க சென்றுள்ளார்.

மதுபோதையில் சென்ற பாலசுப்பிரமணியன், இரவு 11.45 மணியளவில் மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், இரும்பு கம்பியால் மணிகண்டனின் வலது நெற்றியில் அடித்தும், வலது மார்பு பகுதியில் கம்பியால் குத்தியும் கொலை செய்த பாலசுப்பிரமணியன், அங்கிருந்து கணுவாய் திருவள்ளுவர் நகரில் உள்ள அவரது அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர், அவரது மனைவி செல்விக்கு போன் செய்த பாலசுப்பிரமணியன், உன் தம்பி இருக்கிறானா இல்லை செத்துட்டானா போய் பார் எனக் கூறியுள்ளார்.



இதையடுத்து, மணிகண்டனின் தாய், அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையில் ஈடுபட்ட பாலசுப்பிரமணியனை, கணுவாயில் உள்ள தனது அம்மா வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தனது மனைவியின் தம்பியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...