கோவையில் பேருந்தில் பயணியிடம் செயின் பறித்த பெண் கைது

கோவையில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தித் தங்க செயினை திருடிய சத்யா என்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் கோயில் திருவிழா உட்பட பொதுமக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் குடும்பத்துடன் திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்தது.



கோவை: பூ மார்கெட் அருகே பேருந்தில் பயணித்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியைப் பறித்த பெண்ணை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை துடியலூர் அருகே உள்ள ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பெருமாள் பிரபு. இவரது மனைவி சந்திர பிரபா (35). இவர் தனது சகோதரியுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயன்றார். அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி இளம்பெண் ஒருவர் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார்.



இதில் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்த இளம்பெண்ணை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் செயின் பறித்த இளம் பெண் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த சத்யா (32) என்பது தெரிய வந்தது.

சத்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் உள்ள எந்தெந்த கோவில்களில் எந்த நாளில், எந்த தேதியில் திருவிழா வருகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து வைத்து, எப்போது எங்குச் சென்று கூட்டத்தைப் பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபடலாம் என முன் கூட்டியே திட்டம் வகுத்து வைத்துள்ளனர்.

திருவண்ணாமலை, பழனி, திருப்பதி, கோவை உள்பட பல்வேறு கோவில்களில் நடந்த திருவிழாக்களில் கைவரிசை காட்டியது விசாரணையில் அம்பலமானது. திருவிழா நேரங்களில் அந்தந்த ஊர்களுக்குச் சென்று நோட்டமிட்டு, பக்தி பரவசத்துடன் பட்டையும், சந்தனப் பொட்டுமாகப் பக்தரைப் போல் வலம் வந்து கைவரிசை காட்டியிருக்கின்றனர்.

குறிப்பாக நகை, பணத்தைப் பறித்துச் சென்றதும் தெரிய வந்தது. இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தங்களது சொந்த ஊரில் ஆடம்பர பங்களா கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தும் தெரியவந்தன. இன்னும் சில நாளில் கோவை கோனியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ள நிலையில், அதனை அறிந்து நகை மற்றும் பொருட்களைத் திருட கோவை வந்த சத்யா, கூட்டத்தில் கைவரிசை காட்டிய நிலையில் பொதுமக்களால் பிடிபட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

இது குறித்து ஆர் எஸ் புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சத்யாவைக் கைது செய்த நிலையில், சத்யாவுடன் தொடர்பில் உள்ள நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...