உடுமலை - மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம்: கவனமாக பயணிக்க வனத்துறை அறிவுரை

உடுமலை - மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் யானைகளுக்கு அருகில் செல்வதையும், செல்பி புகைப்படம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


திருப்பூர்: உடுமலை - மூணாறு சாலையில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளும் தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன.

இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகம் நம்பி உள்ளது. இதன் காரணமாக யானைகள் மிரட்சி அடைந்து வாகன ஓட்டிகளை துரத்திச் சென்ற சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.

இதனால் உடுமலை மூணாறு-சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

அத்துடன் உடுமலை மூணாறு - சாலை மலையடிவார பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவை தேடி அண்டை மாநிலமான கேரள வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

யானைகளை பொருத்தவரை உணவு தேடியோ, குடிநீர் தேவைக்காகவோ சாலையோர பகுதிகளுக்குள் கூட்டமாக வருகின்றன. அப்படி வரும் நேரங்களில், அவற்றை விரட்டடேவா, செல்போனில் படம் பிடிக்கவோ, யானைகளுக்கு அருகில் வாகனங்களில் வேகமாக செல்லவோ கூடாது.

குறிப்பாக, செல்பி புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தில், பொதுமக்கள் யாரும் யானைகள் உள்ள பகுதிகளுக்கு மிக அருகில் செல்வதும் மிக ஆபத்தானது. எந்த வகையிலும், யானைகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...