தமிழக கோவில்களில் தமிழில் குடமுழுக்கு செய்ய தெய்வீக பேரவை சார்பில் முதல்வருக்கு கடிதம்!

குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு ஆதினங்கள் உறுப்பினராக உள்ள தெய்வீக பேரவை சார்பில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வலியுறுத்தப்பட்டது.


கோவை: தமிழக கோவில்களில் தமிழில் குடமுழுக்கு செய்ய அரசாணை வெளியிட வேண்டும் என முதலமைச்சருக்கு தெய்வீக பேரவை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தெய்வீக பேரவை அமைப்பில் குன்றக்குடி ஆதீனம், மதுரை ஆதீனம், மயிலம் ஆதீனம், பேரூராதீனம், சிரவை ஆதினம், காமாட்சிபுரி ஆதீனம் ஆகிய ஆதீனங்கள் உள்ளன.

இந்நிலையில், தெய்வீக பேரவை சார்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, தமிழக கோவில்களில் தமிழ் மொழியில் திருக்குடமுழுக்கு நடத்துவதற்கான தகுந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் தகுந்த அரசாணையையும் பிறப்பிக்கும் படி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,







தமிழகத்தில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் பல்வேறு சைவ, வைணவ திருமடங்கள் கீழும் அறக்கட்டளைகள் மற்றும் தனியார் மூலமும் ஆயிரக்கணக்கான திருக்கோவில்கள் உள்ளன.

தமிழகத்தில் வழிபாடு நடைபெற்று வரும் இந்து சமய அறநிலைய ஆட்சி துறையின் கீழ் உள்ள கோவில்களும், திருமடங்கள் மூலம் நிர்வகிக்கப்படும் கோவில்களும் பெரும் பகுதி புராண காலங்கள் மற்றும் பண்டைய தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது.

பண்டைய காலங்களில் கோவில்களின் குடமுழுக்கு, விழாக்கள், பெரு விழாக்கள் அனைத்தும் தமிழ் முறைப்படி நடைபெற்று வந்துள்ளது. தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலத்திற்கு பிறகு வந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தான் சமஸ்கிருதத்தை வழிபாட்டு மொழியாக சிறிது சிறிதாக மாற்றியுள்ளனர்.

தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற திருக்கோவில்களில் வடமொழி வழிபாடுகளோ அல்லது பிறமொழி வழிபாடுகளோ நடைபெற்றதாக எவ்வித சரித்திர குறிப்புகளும் இல்லை. மேலும் கோவில்களின் குடமுழுக்கு விழாக்களும் சைவப் பெருந்தகையால் நடைபெற்றதாகத்தான் சான்றுகள் தெரிவிக்கின்றன.

கருவூர்த் தேவர், நம்பியாண்டார் நம்பி போன்ற சைவப் பெருமக்கள் வடமொழியில் குடமுழுக்கு நடத்தியதாக எவ்வித சான்றுகளும் இல்லை. அதேசமயம் வைணவ திருத்தலமாக விளங்கும் திருமலை திருப்பதியிலும் இன்று வரை நாலாயிரத்திவ்ய பிரபந்தம் தான் வழிபாட்டு பாடலாக உள்ளது.

பல்வேறு மன்னர்களின் படையெடுப்பில் ஊடுருவிய ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் வடமொழியை தெய்வ மொழி என்றும் இறைவன் மொழி என்றும் தவறாக சித்தரித்து வடமொழியின் ஆதிக்கத்தையும் ஆளுமையும் முன்னெடுத்து விட்டனர். திருக்குட நீராட்டு வழிபாடுகள், தமிழில் நடைபெறுமானால் பாமர மக்களும் வழிபாடுகளில் தங்களை முழுமையாக அர்ப்பணிக்க வாய்ப்பாக அமையும்.

எனவே சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக கோவில்களில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் நடத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்கியுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் தமிழ் மொழியில் தமிழக கோவில்களில் திருக்குடமுழுக்கு நடத்துவதற்கு தகுந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை தகுந்த அரசாணையையும் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...