வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்க கூடியதாக இல்லை..! - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

வேளாண் பட்ஜெட் என்கிற பெயரில் திமுக அரசு சட்டமன்றத்தில் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது முறையாக தாக்கல் செய்த பட்ஜெட்டும், சவலை குழந்தையாகவே உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.



சென்னை: தமிழக அரசின் வேளாண்துறைக்கான பட்ஜெட்டானது விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்க கூடிய பட்ஜெட்டாக இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.



இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக கரும்புக்கு டன்னுக்கு நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு தற்பொழுது 195 ரூபாய் மட்டும் உயர்த்தி இருப்பதாக கூறி விவசாயிகளை வஞ்சிக்க கூடிய, ஏமாற்றக்கூடிய வேலையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

நெல் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தலுக்கு வருவதற்கு முன்பாக திமுக வாக்குறுதிகள் தெரிவித்தார்கள். இன்றைக்கு வேளாண் துறை சார்பில் வெளியிட்ட கூடிய மூன்றாவது பட்ஜெட்டிலும் அந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

விவசாயிகளுடைய பாதுகாவலனாக இருந்த அதிமுக அரசு, மழையானாலும் சரி வறட்சியானாலும் சரி விவசாயிகளுடைய நன்மையில் அக்கறை கொண்டு செயல்படக்கூடிய அரசாக அதிமுக அரசு செயல்பட்டது. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு விவசாயிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொழுது உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. விவசாயிகளை ஏமாற்றக்கூடிய அரசாக, வஞ்சிக்கக்கூடிய அரசாக இந்த திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மணிகள் முளைத்து, மழையில் சேதமாகி எந்த இழப்பீடும் முழுமையாக பெற முடியாமல் தவிக்க கூடிய விவசாயிகளை நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்தேன். அவர்களுக்கு தேவையான இழப்பீடு தொகையை வழங்கினேன்.

தற்போது திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நான் நேரடியாக சென்று அவர்களுடைய துயரங்களை கேட்டறிந்தேன். ஆனால் திமுக அரசு அக்கறை செலுத்தவில்லை. கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு உரிமை தொகை கூட கிடைக்க பெறாமல் திமுக ஆட்சியில் அவலநிலை இருக்கிறது.

நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்த நெல்மணிகளை கொண்டு சென்று விற்பனை செய்யவும் அவர்கள் பாதுகாப்பதற்கும் இந்த அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் பல லட்சம் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து வீணாகி இருக்கிறது. இது விவசாயியின் வயிற்றில் அடிக்கக்கூடிய செயல்.

இரவு பகல் பாராமல் பல மாதங்கள் உழைத்து அறுவடை செய்து நெல்மணிகளை விவசாயிகள் கண்முன்னே முளைத்து வீணாவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை, இந்த திமுக அரசு அதனை கண்டு கொள்ளவில்லை. நேற்றைய தினம் கடலூரில் கனமழையால் 60 ஆயிரம் மின்னூட்டங்கள் கனமழையால் பாதிப்படைந்துள்ளனர். இதையெல்லாம் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை.

எங்கெங்கெல்லாம் விவசாயிகள் அதிக அறுவடை செய்து இருக்கிறார்கள் அதனை பாதுகாக்க தார்பாய்களை தருவதற்கு கூட இந்த அரசு முன்வரவில்லை. அதிமுக அறிவித்ததன் காரணமாகவே பொங்கல் தொகுப்பில் விவசாயிகள் விளைவித்த கரும்பை வழங்கினர்.

விவசாயம், வேளாண் பட்ஜெட் என்கிற பெயரில் ஒரு மாயத் தோற்றத்தை திமுக அரசு இன்றைக்கு சட்டமன்றத்தில் ஏற்படுத்தி உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை அதிமுக அரசு ஏற்படுத்தியது. விவசாயிகளுக்கு பல நன்மைகளை கொடுத்தது அதிமுக அரசு.

இன்றைக்கு வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்திருக்க கூடிய அமைச்சர் வேளாண் மக்களின் நல்வாழ்வுக்காக எந்த நன்மை பயக்க போவதில்லை என்பதை எடுத்துக்காட்டி உள்ளது. மூன்றாவது முறையாக தாக்கல் செய்த பட்ஜெட்டும், சவலை குழந்தையாகவே உள்ளது.

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தில் அதிமுக அரசு நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இன்றைய பட்ஜெட்டில் அதற்கான திட்டங்கள் எதுவும் ஒதுக்கப்படவில்லை, அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இது காழ்ப்புணர்ச்சி காரணமான நடவடிக்கை என்பதை வெளிப்படுத்தி உள்ளது.

காவிரி - குண்டாறு திட்டத்தின் மூலமாக 5 மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெறும். அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் திமுக அரசில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் மின்சாரத்துறை அமைச்சர் மின் தட்டுப்பாடு இல்லை என்கிறார். பிறகு எதற்கு விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்திற்கு கட்டுப்பாடு நேரம் விதிக்கப்பட வேண்டும்.

என்னை பொறுத்த அளவிற்கு நான் ஒரு விவசாயி அதனால் விவசாயிகளுடைய துயரம் எனக்கு தெரியும். அதனால்தான் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் கொடுத்து நேர கட்டுப்பாடு இல்லாமல் 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கினோம். இன்றைக்கு திமுக அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டு விவசாயிகளுக்கு கட்டுப்பாடுகளோடு மின்சாரம் வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள்.

திமுகவில் உழைப்பவர்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைப்பதில்லை. மூத்த வரிசையில் கட்சி தொடங்கியதில் இருந்து உள்ள அமைச்சர்கள் இருக்கும் நிலையில் அதிமுகவில் இருந்து சென்ற செந்தில்பாலாஜிக்கு திமுகவில் முக்கியத்துவம் அளிப்பது ஏன்?. செந்தில் பாலாஜி என்னை துரோகி என கூறுகிறார் அவர் இதுவரை எத்தனை கட்சிக்கு சென்று வந்துள்ளார்.

அவர் எந்த கட்சியில் தான் உண்மையாக இருந்து உள்ளாரா?. என்னை துரோகி என சொல்வதற்கு இவருக்கு என்ன தகுதி உள்ளது. துரோகி என்ற பட்டத்துக்கு அடையாளமாக திகழக்கூடியவரே அவர் தான். நான் அதிமுகவில் சேர்ந்தது முதல் தற்போது வரை அதே கட்சியில் தான் இருக்கிறேன்.

சாதாரண தொண்டர்களை தலைவராக ஆக்கி அழகு பார்க்க கூடியது அதிமுக தான். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களை திமுகவினர் அடைத்து வைத்தார்களா? இல்லையா? ஊடகங்கள் அதனை முழுமையாக வெளிச்சம் போட்டு காட்டி இருந்தால் அவருடைய முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கும்.

வாக்காளர்கள் இல்லாத நிலையில் தான் நாங்கள் வாக்கு சேகரித்தோம். மிகப்பெரிய ஜனநாயக படுகொலையை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக நிகழ்த்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...