கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஏப்.28க்கு ஒத்திவைப்பு!

உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில், செல்போன் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும், ஆய்வு முடிவுக்காக கால அவகாசம் கோரிய நிலையில், வழக்கு வரும் ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கொடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரும் போது தங்குவதற்காக சொகுசு பங்களா ஒன்றும் கட்டப்பட்டது.

இந்த பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. அப்போது இரவு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டனர்.

முதல் குற்றவாளியான கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து சயான் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு தற்போது அனைவரும் ஜாமினில் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகாலமாக இந்த வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். மேலும் சிபிசிஐடி போலிசார் தரப்பில் டி.எஸ்.பி அண்ணாதுரையும் குற்றம் சாட்டப்பட்டோர் தரப்பில் சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோர் மட்டுமே ஆஜராகினர்.

வழக்கு விசாரணையின் போது சிபிசிஐடி போலீசார் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு செல்போன் தகவல்கள் பரிமாற்றம் குறித்த ஆதாரங்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகவும் முடிவுகள் வரும் வரை கால அவகாசம் தேவைப்படுவதாகவும் கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...