கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரந்தோறும் 6 டன் மாம்பலம் ஏற்றுமதி!

கோவை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 250 டன் சரக்குகள் கையாளும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. தமிழகம் மற்றும் கேரளாவில் தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால், வாரந்தோறும் 6 டன் மாம்பழம் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு விமானங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.


கோவை: கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த சரக்கக வளாகம் அமைந்துள்ளது. உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து சரக்குகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

நேரடி விமான சேவை இல்லாத ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கும் ‘பாண்டட் டிரக்’என்ற சேவை மூலம் சாலை வழியாக கொச்சின், பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மாதந்தோறும் உள்நாட்டு பிரிவில் 700 டன், வெளிநாட்டு பிரிவில் 150 டன் சரக்குகள் கையாளப்படுகின்றன. ஸ்கேனிங் ஆபரேட்டர் நியமிக்கப்படாததால் கடந்த இரு மாதங்களாக உள்நாட்டு சரக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கான சரக்கு போக்குவரத்து தொடர்ந்து நடக்கிறது. தற்போது, மாங்காய் சீசன் தொடங்கியுள்ள காரணத்தால் கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு வாரந்தோறும் 6 டன் மாம்பழம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

வழக்கமாக பொறியியல் உற்பத்தி பொருட்கள், வார்படம், காய்கறிகள், பழங்கள் மற்றும் சிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் புக்கிங் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும். சிங்கப்பூர் விமானத்தில் சரக்குகள் புக்கிங் மிகவும் குறைவாக உள்ளதால் அரை டன் அல்லது ஒரு டன் அளவுக்கு மட்டுமே சரக்குகள் கையாளப்படுகின்றன.

ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்படும் நிலையில், ஒவ்வொரு முறையும் 3 டன் அளவுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன. கோடை காலத்தில் மாம்பழம் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படும். தற்போது சீசன் தொடங்கியுள்ளதால் கேரளா மற்றும் பொள்ளாச்சியிலிருந்து மாம்பழம் அதிகளவு ஷார்ஜா விமானத்தில் கொண்டு செல்லப்படுகிறது.

வாரந்தோறும் 6 டன் அளவுக்கு மாம்பழம் கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோவை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 250 டன் சரக்குகள் கையாளும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. சர்வதேச நாடுகளுக்கு விமான சேவை அதிகரித்தால் சரக்குகள் கையாளப்படும் அளவும் கணிசமாக அதிகரிக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...