நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் கசிவு - நடவடிக்கை எடுக்ககோரி காங்கிரஸ் புகார்

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் கசிந்து சில தனியார் நீட் பயிற்சி மையங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு அளித்தனர்.


கோவை: நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்கள் கசிவதற்கு காரணமாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மயூரா ஜெயக்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்விற்கு பல்வேறு மாணவர்கள் மத்திய அரசின் இணையதள பக்கத்தில் அவர்களது விவரங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பித்துள்ளனர். இந்தநிலையில் விண்ணப்பித்த மாணவர்களின் தகவல்கள் கசிந்துள்ளன.

இதனை சில தனியார் நீட் பயிற்சி நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக பெற்று வணிகமயமாக்கும் நோக்கத்தில், பெற்றோர்களை கட்டாயப்படுத்தி மூளைச்சலவை செய்து தங்கள் நிறுவனத்தில் மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.



மத்திய அரசின் நீட் தேர்வு வலைதளபக்கத்தில் பதிவு செய்யப்பட்ட தகவல்களை சட்டத்திற்கு புறம்பாக கசிய செய்த அதிகாரிகள் மீதும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மயூரா ஜெயக்குமார் பேசியதாவது,

மத்திய அரசின் நீட் தேர்வு துறை இந்த ஆண்டு மிகப்பெரிய சைபர் ஊழலில் ஈடுபட்டுள்ளது. சமீப காலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்திய அரசின் வலைத்தளத்தில் விண்ணப்பித்த நிலையில், அந்த தனிப்பட்ட தகவல்களை நீட் தேர்வு துறை தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு கசிய விட்டுள்ளது. இது சட்டப்படி குற்றமாகும்.

தற்போது இந்த தகவல்களை கொண்டு தனியார் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களின் பெற்றோர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கட்டாயப்படுத்தி அவர்களை மூளைச்சலவை செய்து தங்களுடைய நிறுவனங்களில் குழந்தைகளை படிக்க வைத்தால் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என கூறி பணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே மாணவர்களின் தகவல்களை கசியவிட்ட மத்திய அரசின் நீட் தேர்வு துறை அதிகாரிகள் மீதும், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட தனியார் பயிற்சி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...