தமிழகத்தில் கழிவு பஞ்சுக்கு ‘பேக்கிங்’ கட்டணம் விதிப்பு - ‘ஓபன் எண்ட்‘ மில் தொழில்துறையினர் அதிருப்தி!

நூற்பாலை நிர்வாகத்தினர் ஓபன் எண்ட் மில்களுக்கு கழிவு பஞ்சு விற்பனை செய்யும் போது பேக்கிங் கட்டணமாக ரூ.100 முதல் ரூ.200 வரை விதிப்பது ஏற்புடையதல்ல என்றும் தமிழகத்தில் மட்டுமே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக ‘ஓஇ’ தொழில்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.


கோவை: ஓபன் எண்ட் மில்களுக்கு கழிவு பஞ்சு விற்பனை செய்யும் போது பேக்கிங் கட்டணம் விதிப்பதற்கு ‘ஓஇ’ தொழில்துறையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நூற்பாலைகளில் இருந்து பெறப்படும் கழிவு பஞ்சு பயன்படுத்தி நூல் உற்பத்தி செய்யும் பணி ‘ஓபன் எண்ட்’ மில்களில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட ‘ஓஇ’ மில்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 300 மில்கள் கிரே நூல் உற்பத்தி செய்து வருகின்றன.

ஜீன்ஸ் மற்றும் திரை சீலைகள் உள்ளிட்ட பல்வேறு ஜவுளி பொருட்கள் ‘ஓஇ’ மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூலை கொண்டு தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஓஇ மில்களின் முக்கிய மூலப்பொருளாக கழிவுப்பஞ்சுகள் உள்ளன.

ஒவ்வொரு முறை கழிவு பஞ்சு வாங்கும் போதும் பேக்கிங் கட்டணத்தை நூற்பாலை நிர்வாகத்தினர் வசூலிப்பதாகவும் இதுபோன்ற நடைமுறை தமிழகத்தில் மட்டுமே பின்பற்றப்படுவதாகவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின்(ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால் கூறியதாவது,



கழிவு பஞ்சினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுப்பதில் ‘ஓஇ’ மில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பருத்தி, செயற்கை இழை, விஸ்கோஸ் இழை உள்ளிட்ட எந்த பொருளுக்கும் பேக்கிங் கட்டணம் விதிக்கப்படுவதில்லை. நூற்பாலைகள் நூலுக்கு கூட பேக்கிங் கட்டணம் விதிப்பது இல்லை.

ஆனால் ‘ஓஇ’ மில்கள் கழிவு பஞ்சு வாங்கும் போது ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.200 வரை பேக்கிங் கட்டணத்தை நூற்பாலை நிர்வாகத்தினர் வசூலித்து வருகின்றனர். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து கழிவுபஞ்சு இறக்குமதி செய்யும்போது கூட இதுபோல் பேக்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

தமிழகத்தில் மட்டுமே இந்த நடைமுறை காணப்படுகிறது. இது ஏற்புடையதல்ல. ஜவுளி சங்கிலி தொடரிலுள்ள ‘ஓஇ’ மில் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள நூற்பாலை நிர்வாகத்தினர் கழிவு பஞ்சுக்கு பேக்கிங் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின்(ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறியதாவது,



தமிழகத்தில் ஒவ்வொரு நூற்பாலையிலும் ஒவ்வொரு விதமான பேக்கிங் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற நடைமுறை ஏற்புடையதல்ல.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ.63 ஆயிரத்துகுள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கழிவு பஞ்சின் விலை கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.135க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மாதம் ரூ.145ஆக அதிகரித்துள்ளது.

சந்தையில் இரண்டாம் தர பருத்தி தற்போது ஒரு கிலோ ரூ.140 முதல் ரூ.150-வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே இதே நிலை நீடித்தால் ‘ஓஇ’ மில்கள் கழிவு பஞ்சுக்கு மாற்றாக இரண்டாம் தர பருத்தியை வாங்கி நூல் உற்பத்தி செய்யும் நிலை ஏற்படும். எனவே நூற்பாலை நிர்வாகத்தினர் கழிவு பஞ்சு விலையை ரூ.120ஆக குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...