இறையாண்மைக்கு ஆபத்து என்று யார் அழைத்தாலும் செல்வேன் - கமல்ஹாசன் சூசகம்!

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து இறுதி முடிவெடுக்க கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் கோவையில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.


கோவை: மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மக்கள் நீதி மையம் கட்சி தொடங்கப்பட்ட பின்பு கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. இதையடுத்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

இந்த தேர்தல்களில் 2.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. குறிப்பாக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசன், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை பின்னுக்கு தள்ளி 51,481 வாக்குகளை பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுமார் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் கோவை தெற்கு தொகுதியில் வெற்றியை தவறவிட்டார்.

இந்நிலையில் சமீப காலமாக திமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் கமல்ஹாசன் நெருக்கம் காட்டி வருகின்றார். மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நடத்திய இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக கமலஹாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

காங்கிரஸ் கட்சியுடனும், திமுகவுடனும் நெருக்கம் காட்டி வரும் நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை " என்ற புகைப்பட கண்காட்சியினை சென்னையில் கமலஹாசன் திறந்து வைத்தார்.

அப்பொழுது திமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு பதில் அளித்த கமலஹாசன், கூட்டணியை பேச வேண்டிய நேரம் இது அல்ல. சீன் பை சீன்தான் கதையை நகர்த்த வேண்டும், கிளைமாக்ஸ் என்னவென்று இப்போதே கேட்க கூடாது என்று சூசகமாக பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில், கூட்டணி குறித்த கிளைமேக்ஸை அறிவிக்க வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவை அறிவிக்க வேண்டிய சூழலும் கமல்ஹாசனுக்கு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கலந்துரையாட கோவையில் இன்று கோவை மற்றும் சேலம் மண்டல நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதே கோவையில், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் கமல்ஹாசன் களமிறங்க இருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

திமுக கூட்டணியில் ம.நீ.ம இணைய முடிவெடுத்தால் அதில் கோவை நாடாளுமன்ற தொகுதியை கட்டாயம் கேட்டு பெறுவது எனவும், மீண்டும் தனித்து போட்டியிடலாம் என முடிவு செய்தாலும் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது எனவும் முடிவெடுக்க இருப்பதாகவும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே பிற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்தில் ம.நீ.ம கணிசமான வாக்குகளை பெற்றிருந்த நிலையில், இந்த முறை நிச்சயம் கோவை நாடாளுமன்ற தொகுதியில் களம் இறங்குவது என கமல்ஹாசன் முடிவு செய்து இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவை பொறுத்தவரை கோவை நாடாளுமன்ற தொகுதியில் அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அல்லது பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் என இருவரில் ஒருவரை களமிறக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்ணாமலை கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டால், திமுக கூட்டணியில் கமல்ஹாசனை இணைத்து அண்ணாமலைக்கு எதிராக களம் இறக்கவும் திமுக கூட்டணி சார்பில் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கோவை தொகுதி அனைவராலும் கவனிக்கப்படும் முக்கிய தொகுதியாக வலம் வரும் என்பதில் ஐயமில்லை.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...