கோவையில் நிறுவப்பட்டுள்ள 7 அடி உயர வ.உ.சிதம்பரனார் சிலை - விரைவில் முதல்வர் திறந்து வைக்கிறார்!

கோவையில் மாநகராட்சி சார்பில் நிறுவப்பட்டுள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 7அடி உயர முழு உருவச் சிலையை விரைவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் அமைக்கப்பட்டுள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவச்சிலை விரைவில் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் நிறுவப்பட்டுள்ள வ.உ.சி.யின் 7அடி உயர முழு உருவச் சிலையை விரைவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அப்போது செக்கு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது தியாகத்தை நினைவு கூறும் வகையில், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.க்கு, கோவையில் முழு உருவச்சிலை நிறுவப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்தார்.

இதையடுத்து, கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், வ.உ.சி. மைதானத்தில் அவிநாசி சாலையை ஒட்டிய இடத்தில் 50 அடி அகலம், 45 அடி நீளமுள்ள இடம் சிலை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சிலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. இந்நிலையில், சிலை முழுவதுமாக அமைக்கப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினர் கூறியதாவது, ரூ.40 லட்சம் மதிப்பில் பொதுப்பணித்துறையின் சார்பில், வ.உ.சி.க்கு முழு உருவ உலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது.

தரையிலிருந்து 4 அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டு, அதன்மீது 7 அடி உயரத்தில் பீடம் அமைத்து, 7 அடி உயரத்துக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை ராமாவரம் பகுதியில் உள்ள சிலை தயாரிக்கும் மையத்திலிருந்து உலோகத்தாலான இச்சிலை செய்யப்பட்டு, கோவைக்கு கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. மேடை பகுதியில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவோ அல்லது காணொலி வாயிலாகவோ திறந்துவைப்பார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...