கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை - பரபரப்பு!

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள செந்தில்பாலாஜியின் ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை: கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக மின்சார‌ துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, அந்த துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரணையை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே விஷச்சாராயம் அருந்தியதால் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 24 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, தீர்வு காண வேண்டும் என பாஜகவினர் மனு அளித்தனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சமீபகாலமாக அதிகமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கரூர், ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு அமைந்துள்ளது. இங்கு சோதனை நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை அருகே கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் கார்த்திகேயன் என்பவர் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவர், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளராக இருந்து வருகிறார். அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் நிர்வாகியாக இருந்து வந்த இவர், அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கோவை மாநகராட்சி தேர்தலில் அதிமுக மேயர் வேட்பாளர்களில் ஒருவராக கருதப்பட்ட இவரது மனைவி கிருபாலினி கார்த்திகேயன், தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், தொழில் நெருக்கடி காரணமாக செந்தில் கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார்.

இந்த சோதனை முடிவிலேயே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது உள்ளிட்ட விபரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் கோவை விமான நிலையம் அருகேயுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...