திருப்பூரை நெருக்கடியில் இருந்து மீட்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருப்பூர் எம்.பி. சுப்பராயன் வலியுறுத்தல்!

மோடி நல்லது செய்வார் என மக்கள் நம்பினார்கள். ஆனால் அவர் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மட்டுமே ஆதரவாக செயல்படுகிறார் என்றும், தமிழக முதல்வர் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களை அழைத்து பேசி நெருக்கடியை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார்.



திருப்பூர்: தமிழக முதல்வர் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை அழைத்து பேசி நெருக்கடியை தீர்க்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



திருப்பூர் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. திருப்பூரில் தயாராகும் ஆடைகள் ஐந்து கண்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில் உள்நாட்டிலும் பெருமளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவின் கடைக்கோடி மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் குடும்பத்துடன் இடம் பெயர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த திருப்பூர் தற்பொழுது கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் திருப்பூர் மீண்டும் ஒரு கிராமம் போல மாறிவிடும். மோடி வந்தால் தொழில்கள் சிறக்கும் என மக்கள் நம்பினர் ஆனால் அவர் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே உதவி வருகிறார். சிறுகுறு தொழில்கள் தங்களது வர்த்தகத்தை பெரும் நிறுவனங்களிடம் இழந்து வருகின்றனர்.

அதேபோல பங்களாதேஷ் நாட்டில் இருந்து வரக்கூடிய ஆடைகள் திருப்பூரை காட்டிலும் விலை குறைவாக உள்ளது. இதனை மத்திய அரசு கவனித்து பின்னலாடை துறைக்கு எவ்வாறு சலுகைகளை வழங்கி ஊக்குவிப்பது என யோசிக்காமல் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவது குறித்து யோசித்து வருகிறார்.

தமிழக அரசும் அதிக அளவிலான வேலைவாய்ப்பை வழங்கும் இத்துறைக்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் இரவு நேரங்களில் மின்கட்டணம் உயர்வு என்பது போன்ற திடீர் திடீர் அறிவிப்புகள் நொந்த புண்ணில் கோனி ஊசியால் கீறுவது போல உள்ளது.

தமிழகத்திற்கு தேவையான பஞ்சு எட்டில் ஒரு பங்கு மட்டுமே தமிழகத்தில் விளைவதால் பஞ்சு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்க வேண்டும். தமிழக அரசு திருப்பூரில் உள்ள சிறு, குறு பனியன் உற்பத்தியாளர்களை அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்தி திருப்பூரை நெருக்கடியில் இருந்து மீட்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...