கணுவாய் அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை - பொதுமக்கள் அச்சம்!

கணுவாய் அடுத்த திருவள்ளுவர் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானையால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் யானையை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு யானைகள் ஊருக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் கணுவாய் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையை விரட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் ஆனைகட்டி, தடாகம், கணுவாய், மாங்கரை, பன்னிமடை தொண்டாமுத்தூர், ஆகிய பகுதிகளில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள், விளைநிலத்தை சேதப்படுத்துவதுடன் சில சமயங்களில் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களையும் சேதப்படுத்திவிட்டு செல்கின்றன. இதனால் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் நாள்தோறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இந்நிலையில் நேற்று நள்ளிரவு தடாகம் சாலை கணுவாய் அடுத்த திருவள்ளுவர் நகர் பகுதியில் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, ஒருவரது வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த உணவு பொருளை எடுக்க முற்பட்டுள்ளது.



ஆனால் அந்த இடம் மிகவும் குறுகலாக இருந்ததால் யானையால் நுழைய முடியவில்லை.

இதனிடையே வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை சேதப்படுத்தியது. இதில் அவர்களது வீட்டின் ஓடுகள் சில சேதமடைந்தன.



அப்போது அருகில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பியதை தொடர்ந்து யானை அங்கிருந்து சென்றது.

பின்னர் வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து வனத்துறையினர் அந்த காட்டு யானையை வனபகுதிக்குள் விரட்டினர். இதனை அங்கிருந்தவர்கள் அவர்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

காட்டு யானைகள் அடிக்கடி இப்பகுதியில் ஊருக்குள் நுழைந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருவதால் வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு யானைகள் ஊருக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பழுதடைந்த தெரு விளக்குகளை எல்லாம் சரி செய்ய வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...