போலியாக வரி சலுகைகள் பெறுவோருக்கு கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி - வருமானவரித்துறை தகவல்!

வருமான வரித்துறையில் நன்கொடை, வீட்டுக்கடன் உள்ளிட்ட பெயர்களில் பொய் தகவல்களை தெரிவித்து வரி சலுகைகள் பெறுவோரை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்படுவதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


சென்னை: போலியாக வரி சலுகைகள் பெறுவோருக்கு கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்படுவதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமானவரி செலுத்த தகுதியுடையவர்கள் ஆண்டுதோறும் ஜூலை 31-ம் தேதிக்குள் படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். இதுதொடர்பாக, வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது, கோவை வருமானவரித்துறை தலைமை ஆணையர் அலுவலகத்தின் கீழ் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

தற்போது பெரும்பாலும் ஆன்லைன் முறையில் வருமானவரி தாக்கல் செய்யப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் வரி செலுத்துபவர்களின் அனைத்து தகவல்களும் துல்லியமாக கிடைக்கின்றன. முறைகேடுகள் தடுக்கப்படுகின்றன.

இதனால் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வரி மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு இந்திய அரசு மக்கள் நலதிட்டங்களுக்குதான் அவற்றை பயன்படுத்துகிறது. எனவே, வரி செலுத்த தகுதியுடைவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து வருமான வரியை ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

தென்னிந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சி.ஏ.ஜலபதி கூறியதாவது,



பட்டய கணக்காளர் (ஆடிட்டர்) உதவி தேவைப்படாத பிரிவுகளை சேர்ந்த அனைவரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமானவரி படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

முறைகேடுகளை தடுக்க வருமான வரித்துறையில் இந்தாண்டு முதல் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். பெரும்பாலும் வருமானவரி படிவம் தாக்கல் செய்யும்போது பான், ஆதார் உள்ளிட்டவையே முக்கிய ஆவணங்களாக கணக்கில் எடுத்து கொள்ளப்படுகின்றன. வரி செலுத்துவோரின் அனைத்து நிதி சார்ந்த நடவடிக்கைகளையும் இந்த ஆவணங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஒரே நேரத்தில் மிக அதிக தகவல்கள் பதிவு செய்யப்படுவதால் மனிதர்களால் மட்டும் அவற்றின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடியாது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதால் ரூ.10 அல்லது ரூ.20 தொகை வித்தியாசம் இருந்தால் கூட துல்லியமாக தெரிந்து கொள்ள முடிகிறது.

நன்கொடை என்றால் எந்த அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது?, மருத்துவ காப்பீடு என்றால் அதற்கான ஆவணங்கள் இணைக்க வேண்டும். வழங்கப்பட்ட தகவல்கள் சரியாக இருந்தால் மட்டுமே வருமானவரி தாக்கல் செய்ய முடியும். இல்லையெனில் தொழில்நுட்பம் தானாவே நிராகரித்துவிடும். உரிய ஆவணங்களை இணைத்து தாக்கல் செய்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும்.

கடந்த காலங்களில் வருமானவரி தாக்கல் செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் மாதாந்திர ஊதியம் பெறுபவர்களில் அதிக முறைகேடுகள் நடப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால் அத்தகைய பிரிவுகளின்கீழ் உள்ளவர்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே தடையின்றி வருமானவரி தாக்கல் செய்ய முடியும். முறைகேடுகளின் தன்மையை பொறுத்து, அதற்கு உதவிய ஆடிட்டர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...