பெற்றோர் புகை பிடித்தால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு - கோவையில் புற்றுநோய் மருத்துவர் குகன் பேட்டி

இந்தியாவில் முதல்முறையாக ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் புகைப்பிடிப்பதை கைவிடுவதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய 'டிஜிட்டல் ஆடியோ கலந்துரையாடல் ஆலோசனை தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது.



கோவை: 2024 உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் முதன் முறையாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையம் சார்பில் புகையிலையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் புகைப்பிடிப்பதை கைவிடுவதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய 'டிஜிட்டல் ஆடியோ கலந்துரையாடல் ஆலோசனை தொகுப்பு' அறிமுகம் செய்யப்பட்டது.



இந்தத் தொகுப்பை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் V.கீதாலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக இயக்குனர் R.சுந்தர் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் P.குகன் ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டார்.



இந்த நிகழ்வில் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ்.ராஜகோபால்; மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சி.வி.ராம்குமார் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்திகேஷ் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

டாக்டர் குகன் வரவேற்புரையாற்றிய பின்னர் கூறியதாவது, இந்த டிஜிட்டல் ஆடியோ கலந்துரையாடல் ஆலோசனைத் தொகுப்பை www.quitsmokingsrior.com/counsellor_module.html எனும் இணையத்தளம் மூலம் அணுக முடியும். இதில், புகைபிடிப்பதால் ஒருவரின் உடல் எப்படி பாதிக்கப்படுகிறது, புகைப்பிடிப்பதால் புற்றுநோய் எப்படி உண்டாகிறது, புகைபிடிப்பதை கைவிட என்ன வழி, புகைபிடிப்பதை நிறுத்த முயலும் போது வரும் ஆசையை கட்டுப்படுத்த என்ன வழி, புகைபிடிப்பதை விட்டுவிட்டால், அதனால் என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள் ஒரு மருத்துவரிடம் ஆலோசனைக்கு வரும் ஒரு நபர் கேட்டு அறிந்து கொள்வது போல அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேட்கலாம் என்றார்.

புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை மற்றும் புற்றுநோய் பற்றி டாக்டர் குகன் பேசும்பொழுது, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் முதல் 9 லட்சம் பேர் புகையிலை பயன்பாட்டால் வரக்கூடிய நோய்களால் உயிரிழப்பதாக தெரிவித்தார். புகையிலை பயன்படுத்துவதன் மூலம் ஒருவருக்கு மாரடைப்பு, பக்கவாதம், கருவுறுதல் பிரச்சனை, வாய்வழி புற்றுநோய், தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் தலை & கழுத்துப் பகுதி புற்றுநோய் ஆகிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட 14 லட்சம் புது புற்றுநோய் பாதிப்புகளில் 3.8 லட்சம் பாதிப்புகள் புகையிலையால் ஏற்பட்டவை எனவும், நாட்டில் ஏற்படும் புற்றுநோய் மரணங்களில் 30 சதவீதம் புகையிலையால் ஏற்படுகிறது எனவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, தமிழகத்தில் 82,000 பேருக்கு புதிதாக புற்றுநோய் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதில் 1/3 பேருக்கு புற்றுநோய் புகையிலையால் ஏற்பட்டுள்ளது என்றார். இந்தியாவில் சென்ற ஆண்டு, அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் புதிதாக 2.1 லட்சம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. அதற்கு அடுத்ததாக மகாராஷ்டிரா (1.21 லட்சம் புது புற்றுநோய் பாதிப்பு), அதற்கு அடுத்து மேற்கு வங்காளம் (1.13 லட்சம்) பீகார் (1 லட்சம்) மற்றும் தமிழ்நாடு (82,000). இவற்றில் 1/3 புற்றுநோய் பாதிப்பு ஏற்பட புகையிலை காரணமாக உள்ளது என்றார்.

இப்படிப்பட்ட பாதிப்பை புகையிலை தொடர்ந்து ஏற்படுத்தி வருவதால், தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாகவே இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால், இந்த ஆண்டு டிஜிட்டல் ஆடியோ கலந்துரையாடல் ஆலோசனை தொகுப்பை உருவாக்கி இருக்கிறோம் என்றார். இத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் பொதுமக்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் இலவச ஆலோசனைகளை வழங்க இருக்கிறோம்.

மேலும் இந்த ஆலோசனைக்கு வரும் நபர்களில் புகையிலையை கைவிட விரும்பும் நபர்களுக்கு உதவிட நிக்கோட்டின் சுவிங்கம் (Nicotine Chewing Gum) இலவசமாக வழங்க இருக்கிறோம்.

இத்துடன் சேர்த்து இந்த மையத்தில் வாய்வழி புற்றுநோய்க்கான பரிசோதனையை மக்களுக்கு வழங்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். இதன் மூலம் பல நாட்களாக புகை பழக்கத்தையும் புகையிலை பழக்கத்தையும் கொண்ட நபர்கள் இந்த பரிசோதனை எடுத்துக் கொள்ளும் போது அவர்களுடைய ஆரோக்கியம் எந்த அளவில் உள்ளது என்பது பற்றியும் புகையிலையை கைவிடவில்லை என்றால் எப்படிப்பட்ட உடல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை பற்றியும் விளக்கி கூற முடியும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் பலரும் புகையிலையை கைவிட வாய்ப்புகள் இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு மருத்துவர் குகன் பேசினார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...