விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் மக்களுக்கு முதல்வர் வாழ்த்து கூற வேண்டும் - வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தல்

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி குறித்த கருத்துக்களை பதிவிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி தொடர்பான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ள அவர், உலகெங்கும் வாழும் இந்துக்கள் தங்கள் வாழ்வின் எந்த செயலையும் விநாயகப் பெருமானை வணங்கிவிட்டுதான் தொடங்குவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய பாலகங்காதர திலகர் விநாயகர் ஊர்வலத்தை தொடங்கினார் என்றும், அன்று தொடங்கிய விநாயகர் ஊர்வலம் நாடெங்கும் பெரும் எழுச்சியோடு நடந்து வருகிறது என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்த எழுச்சியைத் தடுக்க விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு திமுக அரசு நெருக்கடிகளை கொடுத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

வழிபாட்டு உரிமை என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்றும், அரசியலமைப்புக்கு எதிராக இந்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவராக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது முதலமைச்சர் ஸ்டாலினின் உரிமை என்றாலும், அனைவருக்கும் பொதுவான முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு, மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற மறுப்பது இந்துக்களை அவமதிக்கும் செயல் என்று வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

முதலமைச்சராக விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் மக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த முறையாவது விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...