ஓணம் பண்டிகைக்காக கோவை விமான நிலையத்தில் 4 நாட்களில் 119 டன் பூ, காய்கறி அனுப்பி வைப்பு

கோவை விமான நிலையத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்களில் 119 டன் பூக்கள் மற்றும் காய்கறிகள் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் 2 நாட்களில் மட்டும் 5 டன் கொத்தமல்லி அனுப்பப்பட்டுள்ளது.


கோவை: ஓணம் பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு 4 நாட்களில் 119 டன் எடையிலான பூ, காய்கறிகள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் தினமும் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. தினமும் 25 முதல் 28 விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டுக்கு கோவை உள்ளிட்ட சுற்றுப்புற ஏழு மாவட்டங்களை சேர்ந்த 30 லட்சம் பேர் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

விமான நிலைய வளாகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சரக்கக அலுவலகத்தின் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பல்வேறு பொருட்கள் கையாளப்படுகின்றன. வழக்கத்தை விட பண்டிகை நாட்களில் அதிகளவு சரக்குகள் கையாளப்படுவது வழக்கம். இவ்வாண்டு ஓணம் பண்டிகை செப்டம்பர் 15-ம் தேதி ஞாயிற்றுகிழமை கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து வழக்கத்தை விட அதிக எடையிலான காய்கறிகள், பூக்கள் ஆகியவை கையாளப்படகின்றன.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:

"வழக்கமாக உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் கோவையில் இருந்து பல நகரங்களுக்கு அனுப்பப்படும்(அவுட்பவுண்ட் பிரிவில்) 25 டன் எடையிலான சரக்குகள் தினமும் கையாளப்படும். ஓணம் பண்டிகை முன்னிட்டு கடந்த சில நாட்களாக உள்நாட்டு பிரிவில் சரக்கு கையாளுகை அதிகரித்துள்ளது.

செவ்வாய்கிழமை 34 டன், புதன்கிழமை 33 டன், வியாழக்கிழமை 27 டன், வெள்ளிக்கிழமை 25 டன் என நான்கு நாட்களில் மட்டும் 119 டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இவற்றில் கேரட், பீட்ரூட், கோவக்காய், முருங்கை ஆகிய காய்கறிகளும், கொத்தமல்லி மற்றும் பூக்கள் அதிகளவு புக்கிங் செய்யப்படுகின்றன.

குறிப்பாக புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இரு நாட்களில் கொத்தமல்லி மட்டும் 5 டன் வரை புக்கிங் செய்யப்பட்டு பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இது தவிர காய்கறிகளுக்கு இணையாக பூக்களும் அதிகளவு கையாளப்படுகின்றன. வெளிநாட்டு பிரிவில் ஓணம் பண்டிகைக்காக குறிப்பிட்டு சொல்லும்படி அதிக காய்கறி, பூக்கள் கையாளப்படவில்லை."

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...