'தனியார் வேலைவாய்ப்பு முகாம்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர் சி.வி. கணேசன்'

கோவையில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் சி.வி. கணேசன் பங்கேற்று, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டதாகவும், அரசின் முயற்சிகள் குறித்தும் விளக்கினார்.


கோவை: கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், "நல்ல கல்வி நிறுவனங்கள், மாணவர்களின் தரம் வளர்ந்தால் மட்டும்தான் நாட்டில் பொருளாதார வளர்ச்சியடையும்" என்று தெரிவித்தார். மேலும், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியின் திறமையான நிர்வாகத்தையும் பாராட்டினார்.

அமைச்சர் கணேசன் தொடர்ந்து, "படித்தால் வேலை கிடைக்காது என்பது அவநம்பிக்கை. முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 238 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி 2,00,7000 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி இருக்கிறோம். இதுவரை 5 லட்சம் பேருக்கு தனியார் வேலைவாய்ப்பு வழங்கிய ஆட்சி முதல்வருடைய ஆட்சி" என்று குறிப்பிட்டார்.

"முதன்முதலில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்தான் சேப்பாக்கம் தொகுதியில் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார். அப்போது எனக்கு வேலைவாய்ப்பு முகாம் என்ன என்பதே தெரியாது. அவருடன் சென்று என்ன செய்கிறார் என பார்த்துதான் கற்றுக்கொண்டேன்" என்று தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

அமைச்சர் மேலும், "தான் ஏதாவது ஒரு பிரபல நிறுவனங்களுக்கு வேலைக்கு பரிந்துரை கடிதம் கொடுத்தால், அந்த நிறுவனத்தின் நுழைவு வாயிலுக்குள்ளேயே விட மாட்டார்கள். போய் சேரவே முடியாது, கடிதம் வாங்கியவர்கள் படாத பாடு பட்டு விடுவார்கள்" என்று குறிப்பிட்டார். இது போன்ற சிக்கல்களை தவிர்க்கவே வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுவதாக விளக்கினார்.

"வேலை கிடைக்காதவர்கள் அச்சப்பட வேண்டாம். வேலை இல்லை என்ற சொல்லை போக்க வேண்டும் என முதல்வர் வெளிநாட்டுக்கு சென்று வந்து புதிய தொழிற்சாலைகளை திறந்து கொண்டே இருக்கிறார்" என்று தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய அமைச்சர், "முதலில் தைரியமாக இருக்க வேண்டும். இயக்குநர் சுந்தரவல்லி போன்றவர்களை ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளுங்கள். வெற்றி பெற்ற மனிதர்களைப் பார்த்து பழகுங்கள், தோல்வியடைந்தவர்களைப் பார்க்காதீர்கள். எதிர்மறை சிந்தனைகளை மனதில் இருந்து எடுத்திட வேண்டும்" என்று கூறினார்.

நிகழ்ச்சியின் முடிவில், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சி.வி. கணேசன் பதிலளிக்காமல் சென்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...