உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு பயணம் செய்த மாவட்ட ஆட்சியர்

கோவை உக்கடம் பெரியகுளத்தில் உலக முதியோர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி முதியோர்களுடன் படகு பயணம் செய்தார். நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவை உக்கடம் பெரியகுளம் பகுதியில் உலக முதியோர் தின விழா இன்று நடைபெற்றது. சமுகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களோடு இணைந்து இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இவ்விழாவில் கலந்து கொண்டார்.



இந்த விழாவில், பல்வேறு முதியோர் இல்லங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்றனர். விழாவின் சிறப்பம்சமாக உக்கடம் பெரியகுளத்தில், மாவட்ட ஆட்சியர் முதியவர்களுடன் படகு பயணம் செய்தார்.



பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதியோர் இல்லங்களைச் சேர்ந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்வில் கலந்து கொண்ட முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் கண்காட்சியைப் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின்போது செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், "முதியோர் நலனுக்காக மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை மேலும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேற்கொள்ளப்படும்," என்று கூறினார்.

தொண்டாமுத்தூர் மற்றும் ஆனைக்கட்டி பகுதிகளில் மண் எடுப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர், "உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய சேர்மன், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து 19 இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம். அப்பகுதியில் மண்ணின் தரம் குறித்தும், ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்படும்," என்றார்.

ஆனைக்கட்டி பகுதியில் செயல்படும் தனியார் ரிசார்ட் சம்பந்தமாக பொதுமக்கள் முறையிட்டது குறித்த கேள்விக்கு, "அந்த ரிசார்ட் மீது சில பிரச்சினைகள் குறித்து மக்கள் குறிப்பிட்டனர். குறிப்பாக வழித்தடங்கள் குறித்து தெரிவித்தனர். இது சம்பந்தமாக சேர்மன் முடிவெடுப்பார். ரிசார்ட் பிரச்சனை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தால் விசாரணை மேற்கொள்ளப்படும்," என்று ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...