கோவை ஈஷா யோகா மையத்தில் காவல்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை: வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்

கோவை ஈஷா யோகா மையத்தில் காவல்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஈஷா தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முக்கிய விவரங்கள் இங்கே.


கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை உச்சநீதிமன்றம் (அக்.3) தடை விதித்துள்ளது. மேலும், ஈஷா தொடர்பான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ், ஈஷா யோக மையத்தில் உள்ள தனது மகள்களை மீட்டுத்தரக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாகவும், ஈஷா யோகா மையத்தின் மீதான அனைத்து குற்ற வழக்குகள் குறித்தும் விசாரணை செய்து முழுமையான அறிக்கையை அக்டோபர் 4-ஆம் தேதி தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் தலைமையில் 6 குழுக்களாக பிரிந்து, கடந்த இரண்டு நாள்களாக ஈஷா யோகா மையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஈஷா யோகா மையம் தரப்பில் காவல்துறையினரின் விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஈஷா யோகா மையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இவை மதச் சுதந்திரம் தொடர்பான பிரச்சினை என்றும், இது மிகவும் அவசரமான மற்றும் தீவிரமான வழக்கு என்றும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். சத்குரு மிகவும் மதிக்கப்படுபவர் மற்றும் லட்சக்கணக்கான பின் தொடர்பவர்களைக் கொண்டவர் என்றும் அவர் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம், ஈஷா மையத்தில் உள்ள ஓய்வுபெற்ற பேராசிரியரின் இரண்டு மகள்களுடனும் இணைய வழியாக விசாரணை மேற்கொண்டு, அவர்களின் கருத்துகளை பதிவு செய்தது. மேலும், ஈஷா ஆசிரமத்தின் மருத்துவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்திருப்பது பற்றியும், பழங்குடி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு அளித்ததாக எழுந்துள்ள புகாருக்கும் ஈஷா மையத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த வழக்கறிஞர், குற்றச்சாட்டுக்கு உள்ளான மருத்துவர் அங்கே தங்குபவர் அல்ல, நாள்தோறும் வந்து செல்பவர் என்றும், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த பள்ளிக்கும் ஈஷா மையத்துக்கும் எவ்வித சம்மதமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

நீதிபதிகள், ஓய்வுபெற்ற பேராசிரியரின் இரண்டு மகள்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் விருப்பத்தின் பேரில்தான் ஆசிரமத்தில் இருப்பதாகவும், சுதந்திரமாக இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஈஷா மையத்தில் போலீஸ் விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு வழக்கின் விசாரணையை மாற்றியது. மாநில காவல்துறை இதுவரை நடத்திய விசாரணையின் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...