வால்பாறையில் வெள்ளப் பாதுகாப்பு ஒத்திகை: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

வால்பாறையில் வடகிழக்கு பருவமழை குறைவாக உள்ள நிலையில், வருவாய் துறை அலுவலர் தலைமையில் வெள்ளப் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்து வரும் நிலையில், வெள்ளம் குறித்த பாதுகாப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

வால்பாறை வருவாய் துறை அலுவலர் தலைமையில், பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறை மற்றும் காவல் துறை ஆகியோர் இணைந்து இந்த ஒத்திகையை நடத்தினர். கூலாங்கள் ஆற்றில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஆற்றில் அடித்துச் செல்லப்படும் ஒருவரை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து தத்ரூபமாக செய்து காட்டப்பட்டது.



தீயணைப்பு துறையினர், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் முக்கிய அறிவுரைகளை வழங்கினர். மழை பெய்யும் நேரங்களில் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்றும், மலைப் பகுதியில் பெய்யும் மழை காரணமாக ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்றும் எச்சரித்தனர். மேலும், வெள்ளத்தில் சிக்கினால் எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்தும் விளக்கமளித்தனர்.

இந்த ஒத்திகையில் பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறை அதிகாரிகள், காவல் துறையினர் ஆகியோர் பங்கேற்று செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், துணை வட்டாட்சியர், பொதுப்பணித் துறை, நகராட்சி நிர்வாகத் துறை ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வு, வால்பாறை பகுதியில் வெள்ளப் பாதுகாப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...