நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் அமைச்சர் விக்னேஷை சந்தித்து மனு அளித்தனர். கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், முதல்வருடன் கலந்தாலோசித்து ஒரு மாதத்திற்குள் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.


கோவை: டாஸ்மாக் ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.



தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, கோவையில் சுந்தராபுரத்தில் உள்ள அமைச்சர் விக்னேஷின் இல்லத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து மனுவை வழங்கினர்.

அந்த மனுவில், 480 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்ட விதி இருந்தபோதிலும், கடந்த 23 ஆண்டுகளாக ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படாமல் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது. தொழிலாளர் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்து காலம் தாழ்த்தாமல், அனைத்து பணியாளர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், ESI மருத்துவத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துதல், மாவட்ட மேலாளர்களின் அதிகாரங்களை மீண்டும் வழங்குதல், நீண்ட நாட்களாக கடை பணியிலிருந்து விலக்கப்பட்டு கிடங்குகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணிவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கும் மீண்டும் கடை பணியையும் நிலுவையில் உள்ள பிழைப்பூதியத்தையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில் முறையான ஆய்வு இன்றி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மறுஆய்வு செய்து மீண்டும் திறக்க வேண்டும் என்றும், தனியார் மனமகிழ் மன்றங்களில் விதிமுறைகளுக்கு மாறாக நடைபெறும் மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அமல்படுத்தப்பட்ட காலி மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், End-to-End Billing முறையில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்து அனைத்து கடைகளுக்கும் தடையற்ற இணைய வசதி ஏற்படுத்த வேண்டும், கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன், மின் கட்டணம், அட்டைப்பெட்டி கழிவு, உடைந்த பாட்டில்களுக்கான இழப்பீடு, இறக்கு கூலி, கட்டிட வாடகை மற்றும் குடிநீர் உள்ளிட்ட நிர்வாகச் செலவுகளை ஊழியர்கள் மீது சுமத்தாமல், நிர்வாகமே முழுமையாக ஏற்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின.

இந்த கோரிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்த அமைச்சர் விக்னேஷ், அவற்றை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்து கோரிக்கைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதாக உறுதியளித்ததாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நிகழ்வில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க தலைவர் ஜான் அந்தோணி ராஜ், பொதுச் செயலாளர் செந்தில் பிரபு, பொருளாளர் ராமகிருஷ்ணன், ஏஐடியுசி சார்பில் கணேசன், மனோகரன், தொமுச மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், கே. ராமமூர்த்தி, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பால்ராஜ், தங்கவேல், பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் ராமச்சுந்தரம், பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...