கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியார் உரிமையாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். தவறினால் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன்கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


Coimbatore: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள அனைத்து கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியார் கட்டட உரிமையாளர்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. வலியுறுத்தியுள்ளார். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன்கீழ் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் என ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாவதற்கான சாதகமான காலநிலை நிலவுவதால், கட்டுமான இடங்களில் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுமான இடங்களில் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள்:

தனியார் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் நீர் தேக்க தொட்டிகள் மற்றும் நீல நிற பிளாஸ்டிக் டிரம்களை திறந்த நிலையில் வைத்திருக்கக் கூடாது. தண்ணீர் தொட்டி மற்றும் கொள்கலன்களை பிளீச்சிங் பவுடர் அல்லது சுண்ணாம்பு கொண்டு சுத்தம் செய்து நீர் நிரப்பப்பட்டு கொசுக்கள் புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும்.

கட்டுமான இடங்களில் உள்ள கட்டடத்தில் லிப்ட் பிட்டில் நீர் தேங்காத வகையில் பிளீசிங் பவுடர் அல்லது பயன்படுத்திய என்ஜின் ஆயில் பயன்படுத்தி கொசு புழுக்கள் உருவாகாமல் வைத்திருக்க வேண்டும்.

கட்டுமான இடங்களில் தங்கி பணிபுரியும் கட்டடப் பணியாளர்கள் தங்கும் தற்காலிக குடில் அல்லது கொட்டகையில் அவர்கள் பயன்படுத்திய வீணான பிளாஸ்டிக் பொருட்கள், டீ கப்புகள், டயர்கள், பாலித்தீன் பைகள், முட்டை ஓடுகள், தேங்காய் சிறட்டைகள் போன்றவற்றை உடனடியாக அகற்றிட வேண்டும்.

கட்டுமானப் பணி நடைபெறும் இடங்களில் வைத்திருக்கும் மண் அள்ளும் சட்டிகள், கலவை சுமந்து செல்லும் தள்ளுவண்டிகளை தினசரி கழுவிய பின்னர் நீர் தேங்காமல் வைத்துகொள்ள வேண்டும்.

கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நடவடிக்கைகள்:

கட்டிடங்களில் பயன்படுத்திய பெயின்ட் டப்பாக்கள், உடைந்த குடங்கள், பிளாஸ்டிக் பைப்புகள், அட்டைகள், தெர்மோகோல் போன்றவற்றை நீர் தேங்காதவாறு உடனடியாக அகற்றிட வேண்டும். கட்டிட பணியாளர்கள் பயன்படுத்தும் பார்சல் சாப்பாடு கலன்கள், பாலித்தீன் கவர்கள், கண்ணாடி மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவைகளையும் அகற்றிட வேண்டும்.

கட்டடத்தினை சுற்றி கழிவு நீர் தேங்காதவாறு வைத்திருக்க வேண்டும். கட்டுமான இடங்களில் அமைத்திருக்கும் தற்காலிக கூரைகளில் டயர்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபடும் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, மேற்குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. வலியுறுத்தியுள்ளார்.

விதிமுறைகளை மீறும் கட்டட உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன்கீழ் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...