கோவை காந்திபுரம் புதிய பாலத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும்: முதலமைச்சர்


கோவை, டிசம்பர் 3

கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர், எடப்பாடி திரு. கே. பழனிச்சாமி இன்று அறிவித்தார்.

மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டம் வருகின்ற போது போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

கோவை வஉசி மைதானத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 



இந்த விழாவின் ஒரு பகுதியாக முதலமைச்சர் ரூ. 691.51 கோடி மதிப்பினாலான புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும், ரூ. 1328.95 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். வஉசி உயிரியல் பூங்கா தரம் உயர்த்தப்படும், என்றும் அறிவித்தார்.



அவர் பேசுகையில், மேலும் கூறியதாவது

கோவையில் சிறு தொழில் செய்பவர்கள் ஜிஎஸ்டி வரியை ஜாப் ஆர்டர் செய்பவர்களுக்கு குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அடுத்து நடைபெறும் ஜிஎஸ்டி கூட்டத்தில் சிறுதொழில் முனைவோரின் கோரிக்கைகள் வலியுறுத்தப்படும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமிக்கு விரைவில் நினைவு மண்டப கட்டிடம் கட்டி முடிக்கப்படும். நீரா பானம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றி விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

ஜெயலலிதா ஆன்மா நம்முடன் இருக்கின்றது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற முடியும். இரட்டை இலை சின்னம் நமக்குக் கிடைத்ததால் அது கிடைக்காதவர்கள் ஏதேதோ பேசி வருகின்றனர்.

சமீபத்திய புயல் மழையால் கன்னியாகுமரி மாவட்டம் அதிக பாதிப்பினை சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை சரி செய்ய அமைச்சர்கள் அங்கு முகாமிட்டு பணிகளை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட இடங்களை சரி செய்யும் பணிகள் விரைவில் நிறைவடையும். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மீட்புப் பணியில் கப்பல் படை, கடலோர பாதுகாப்புப் படைகளை சேர்ந்த 15 கப்பல்கள், 4 விமானங்கள், 5 ஹெலிக்காப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கின்றது.

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து வருகிறார். ஆனால், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு கடலில் சிக்கிய மீனவர்களை மீட்கவில்லை என பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். புயலில் சிக்கியுள்ள அனைத்து மீனவர்களையும் இந்த அரசு மீட்டெடுக்கும். மீனவர்கள் அச்சப்படத் தேவையில்லை.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவு மோதி இளைஞர் ரகுபதி உயிரிழக்கவில்லை. லாரி மோதித்தான் இளைஞர் இறந்து இருக்கின்றார். விபத்து நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் கொடுத்துள்ளோம். அதிமுக-விற்கு செல்வாக்கு அதிகரிப்பதை தடுக்க ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது" என்றார்.

இதனை தொடந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் பட்டியலிட்டார். அவை பின்வருமாறு:-



1. பொள்ளாச்சி வட்டத்தை இரண்டாகப் பிரித்து ஆனைமலை பகுதி தனி வட்டமாக மாற்றப்படும்.

2. பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும்.

3. தடாகம் பகுதியில் என்.எஸ்.ஆர் சாலையில் சுரங்கப் பாதை அல்லது உயர்மட்ட சாலை அமைக்க ஆய்வு செய்யப்படும்.

4. கேரள அரசின் அனுமதி பெற்று ஈசா மையத்துடன் இணைந்து சிறுவாணி அணை தூர்வாரப்படும்.

5. கோவை மாநகராட்சி வஉசி விலங்குகள் பூங்கா ரூ. 20 கோடி செலவில் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும்.

6. கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்திற்கு டாக்டர். எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும்.

7. கோவை அரசு மருத்துவமனை வளாகம் ரூ. 8.41 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.



"எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என பேரறிஞர் தெரிவித்தார். ஆனால் திமுக-விற்கு எதையும் தாங்காத இதயம்தான் இருக்கின்றது. . 

இதனைத்தொடர்ந்து, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் , "பரம்பிக்குளம், ஆழியாறு திட்டத்தின் ஒரு பகுதியாக ஆனைமலையாறு, நல்லாறு திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும். இந்தத் திட்டத்தை சொட்டு நீர் பாசனமாக அமல்படுத்த வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

தொடந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "எம்ஜிஆர் நூற்றாண்டு விழா 28-வது மாவட்டமாக கோவையில் நடைபெறுகிறது. வரும் ஜனவரி மாதம் சென்னையில் இந்த விழா நடைபெற உள்ளது.



கோவைக்கு தேவையான திட்டங்களை முதலமைச்சர் வழங்கி வருகின்றார். எந்த திட்டங்களைக் கேட்டாலும் வழங்கும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். ஜிஎஸ்டி வரியினால் பாதிப்பு ஏற்பட்டதும் உடனடியாக அமைச்சர் ஜெயக்குமாருடன் பேசி அதை சரி செய்து கொடுத்தார். இந்த விழா நடக்கக் கூடாது என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நினைத்தார். விழாவை நிறுத்த வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரை வைத்து ஸ்டாலின் முயற்சித்தார். இந்த ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் செயல்படுகின்றார்.

இதனைத் தொடந்து பேசிய துணை சபாநாயகர் தம்பிதுரை, "ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என நினைத்துக்கொண்டு செயல்படுகின்றார். ஆனால், அது நடக்காது. தமிழ் கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் நமது கொள்கை. ஆனால் நாதஸ்வரத்திற்குப் பதிலாக செண்டை மேளம் இசைத்துக்கொண்டு இருக்கின்றோம். இரட்டை இலை சின்னத்தை பெற்று விட்டோம். ஆர்.கே.நகரில் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என தெரிவித்தார்.



Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...