காஷ்மீரில் 56 மணி நேர துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது 2 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்


ஸ்ரீநகர்: காஷ்மீர் அரசு கட்டிடத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து 56 மணி நேர துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது.

பயங்கரவாதிகள் புகுந்தனர்

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவில் உள்ள பாம்போர் என்னும் இடத்தில் அரசுக்கு சொந்தமான தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகத்தின் அடுக்கு மாடி கட்டிடம் அமைந்து உள்ளது. 

இங்கு கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கரவாதிகள் புகுந்தனர். அவர்கள் போலீசாரின் கவனத்தை ஈர்ப்பதற்காக கட்டிட அறைகளுக்குள் இருந்த தரைவிரிப்புகளை தீ வைத்து கொளுத்தினர். இதனால் அங்கு பெரும் புகை மண்டலம் உருவானது.

கட்டிடம் பலத்த சேதம்

இதைத்தொடர்ந்து அங்கு உடனடியாக விரைந்து சென்ற போலீசார் மற்றும் ராணுவத்தின் சிறப்பு அதிரடிப் படையினர் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகள் அதிக எண்ணிக்கையில் இருக்கலாம் என்று கருதி அந்த கட்டிடத்திற்குள் நுழைந்து மிகுந்த எச்சரிக்கையுடன் தாக்குதலை தொடங்கினர். பயங்கரவாதிகளும் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே இடைவிடாமல் துப்பாக்கி சண்டை நீடித்தது. சிறிய ரக பீரங்கி, ராக்கெட்டுகள் மூலமும் அதிரடிப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் நேற்று முன்தினம் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படை வீரர் ஒருவரும், ஒரு போலீஸ்காரரும் படுகாயம் அடைந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் அந்த கட்டிடத்தின் பெரும்பாலான சுவர்கள் பலத்த சேதம் அடைந்தன.

2-வது பயங்கரவாதி சுட்டுக்கொலை

2-வது நாள் சண்டையின்போது இருள் காரணமாக இரவு நேரத்தில் தாக்குதலை நிறுத்திய அதிரடிப்படை வீரர்கள் 3–வது நாளாக நேற்று அதிகாலை மீண்டும் தாக்குதலை தொடர்ந்தனர். அந்த கட்டிடத்தின் அனைத்து பகுதிகளையும் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 2–வது பயங்கரவாதியும் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

56 மணி நேர துப்பாக்கி சண்டை 

அந்த கட்டிடத்துக்குள் மற்றொரு பயங்கரவாதியும் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் அதிரடிப்படையினர் அவனை பிடிப்பதற்காக கட்டிடத்தின் 50 அறைகளிலும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  

எனினும், 3-வது பயங்கரவாதி யாரும் அங்கு இல்லை. மேலும் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை கட்டிடத்துக்குள் மறைத்து வைத்திருக்கலாம் என்பதால் அங்குள்ள அத்தனை அறைகளிலும் அங்குல அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு வெடிகுண்டுகள் அல்லது வெடி பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. 

இதை உறுதி செய்த பின்னர் அதிரடிப்படையினர் 56 மணி நேரத்துக்கு பின்பு தங்களது தாக்குதலை நிறுத்திக் கொண்டனர். இதையடுத்து பயங்கரவாதிகள் உடனான சண்டை முடிவுக்கு வந்தது.

இந்த தாக்குதல் பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தினர்

தாக்குதலில் ஈடுபட்ட 2 பயங்கரவாதிகளின் உடல்களும் கைப்பற்றப்பட்டன. பாதுகாப்பு படை வீரர்கள் அதிகம் நிறுத்தப்பட்டுள்ள இந்த கட்டிடத்துக்குள் பயங்கரவாதிகள் எப்படி நுழைந்தார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதன் பின்னால் ஓடும் ஆற்றின் வழியாக அவர்கள் நுழைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 

எனினும் இதுபற்றிய தகவல் முழுமையான விசாரணைக்கு பின்பே தெரிய வரும். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் லஷ்கர் இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதற்கான முகாந்திரம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...