6000 கோடி கறுப்புப் பணத்தை அரசுக்கு அள்ளிக்கொடுத்த குஜராத் வைர வியாபாரி!

பலமுறை தனது நிறுவன ஊழியர்களுக்கு அதிரடிச் சலுகைகளை அறிவித்தும், கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுத்து அசத்தியும் ஊடகச் செய்திகளில் இடம்பிடித்த குஜராத் வைர வியாபாரி லால்ஜி பாய் துளசிபாய் பட்டேல், தற்போது 6 ஆயிரம் கோடி கறுப்புப் பணத்தை அரசுக்கு அள்ளிக்கொடுத்து அசத்தியுள்ளார்.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ஆம் தேதி இரவு அறிவித்ததையடுத்து, நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த அறிவிப்பு ஒரு சிலரால் வரவேற்கப்பட்டாலும் ஏழை-எளிய மக்களையும், வியாபாரிகளையும் புரட்டிப் போட்டுவிட்டது.

இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதிலும், புதிய ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்வதிலும் வங்கிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, அத்தியாவசியத் தேவைகளுக்கு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான கால வரம்பை, வரும் 24-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

ஏழை எளிய மக்கள் அன்றாட வாழ்க்கையையும் தேவைகளையும் நிறைவு செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், கறுப்புப் பணத்தை வைத்திருக்கும் பணக்கார முதலைகள் அவற்றை எப்படி மாற்றுவது என முழிபிதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். சில கருப்புப் பண முதலைகள் காதும், காதும் வைத்ததுபோல் கருப்பை வெள்ளையாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சில கருப்புப் பண முதலைகள் நீர், நிலம், நெருப்பு என்னும் பஞ்சபூதங்களில் மூன்றுக்கு தங்களது கருப்புப் பணத்தை இரையாக்கி வரும் செய்திகள் அதிகளவில் வெளியாகி வருகின்றன. கிழிந்த ரூபாய் நோட்டுகள் ஆற்றிலும், கால்வாய்களிலும் மிதப்பதும், சாலைகளில் ரூபாய் நோட்டுகளை கொட்டி எரிப்பதும் அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன.

இந்த நிலையில், மோடியையே மிஞ்சிய நிலையில் ஓர் அதிரடி முடிவை எடுத்திருக்கிறார் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பிரபல வைர வியாபாரி லால்ஜி படேல்.

இவர் இதுவரை கணக்கில் காட்டாமல் கறுப்புப் பணமாக வைத்திருந்த 6000 கோடி ரூபாய் கருப்புப் பணத்தை தானாக முன்வந்து வருமான வரித்துறையினரிடம்  ஒப்படைத்துள்ளதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் இவ்வளவு பெரிய தொகையை ஒப்படைத்ததோடு மட்டுமில்லாமல், மேற்படி தொகைக்கான 30 சதவீதம் வரியாக 1800 கோடி ரூபாயையும், இந்த வரித்தொகை மீதான 200 சதவீத அபராதமாக 3600 கோடி ரூபாய் என மேற்கொண்டு மொத்தம் 5400 கோடி ரூபாயை செலுத்தவும் இவர் முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிரதமரின் அதிரடி அறிவிப்புக்கு பின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் பின் இதுவரை மீட்கப்பட்ட கறுப்புப் பணத்திலேயே இது தான் அதிக தொகை என்று கூறப்படுகிறது.

இவ்வளவு பெருந்தன்மை கொண்ட அந்த வைர வியாபாரி, பலமுறை தனது நிறுவன ஊழியர்களுக்கு அதிரடிச் சலுகைகளை அறிவித்தும், கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுத்து அசத்தியும் ஊடகச் செய்திகளில் இடம்பிடித்த லால்ஜி பாய் துளசிபாய் பட்டேல்தான்.

இவர் தனது நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பாக வீடுகளையும், கார்களையும், நகைகளையும், லட்சக்கணக்கான ரொக்கத்தையும் அள்ளிக் கொடுத்த வள்ளல் லால்ஜி பாய் துளசிபாய் பட்டேல், நாட்டின் நலன் கருதி இவ்வளவு பெரிய தொகைக்கான கருப்புப் பணத்தை அரசிடம் ஒப்படைத்துள்ளார்.

ஒப்படைக்கப்பட்ட பணத்தின் மூலம் இவர் திரும்பப் பெறுவது வெறும் 600 கோடி ரூபாய்தான். ஆனால், அவர் பதுக்கி வைத்திருந்த 6 ஆயிரம் கோடி ரூபாய் தராத நிம்மதியை இந்த 600 கோடி அவருக்கு நிச்சயமாக அளிக்கும் என நம்பலாம். இவரிடம் வசூலிக்கும் வரி மற்றும் அபராதத் தொகையை மத்திய அரசு தனியாக எடுத்து ஏதாவது தர்ம காரியத்துக்கு பயன்படுத்தினால், நிம்மதியோடு மக்களின் ஆசீர்வாதமும் லால்ஜி பாய் பட்டேலை போய்ச் சேரும்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு தில்லி செங்கோட்டை பகுதியில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு தனது முதலாவது சுதந்திர தின உரையாற்றியபோது, அவர் தங்க சரிகைகளால் தனது பெயர் இழைக்கப்பட்ட கோட், சூட் அணிந்திருந்ததாக பரபரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இந்த கோட், சூட்டை இதே லால்ஜி பாய் பட்டேல்தான் 4 கோடியே 31 லட்சத்து 31 ஆயிரத்து 311 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தார். சமீபத்தில் மத்திய அரசின் பெண் குழந்தைகள் கல்வி திட்டத்துக்கு 200 கோடி ரூபாயை நன்கொடையாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியின் அதிக விலையுள்ள கோட்சூட் கூட இவர் வசம் இருக்க, இவருடைய 6000 கோடி ரூபாய் இப்போது வருமான வரித்துறையிடம் இருக்கிறது.

இதுகுறித்த தகவலை பீயிங் இந்தியன் (beingindian.com) இணையதளம் வெளியிட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...